ஜெ.,நலம் பெற... அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2500 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
தேனி: முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனியில் இன்று 25 ஆயிரம் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்ய உள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுகவினர் தொடர்ந்து பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடையை வேண்டி, தேனியில் இன்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 25 ஆயிரம் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்துகின்றனர். புளேந்திரபுர விளக்கு என்ற இடத்தில் பால்குடம் ஊர்வலம் தொடங்குகிறது. அங்கிருந்து சென்று வீரபாண்டி கோவிலில் வழிபாடு செய்கிறார்கள்.
தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளில் இருந்தும் 25 ஆயிரம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நேற்றே சில்வர் குடமும், சேலையும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2008 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் பால்குடம் ஏந்தி பேரணியாகச் சென்ற பெண்கள், பெரிய மாரியம்மன் கோயிலில் பாலாபிஷேகம் செய்து ஜெயலலிதா பூரண நலன் பெற வேண்டும் என வழிபட்டனர்.