மழை வேண்டி விவசாயிகள் வருண ஜெபம்
வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் மழை வேண்டி வருண ஜெபம் செய்து வருகின்றனர் விவசாயிகள்.
நெல்லை: மழை பெய்ய வேண்டி மணிமுத்தாறில் விவசாயிகள் தீவிரமாக வருண ஜெபம் செய்து வருகின்றனர்.
தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பரில் முடிவது வழக்கம். இந்தாண்டு டிசம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தில் அனைத்து அணைகளும் வறண்டு விட்டன. தாமிரபரணி நதி நீர் பாசனத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்வோர் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதற்கிடையை மணிமுத்தாறில் அமைந்துள்ள வன பேச்சியம்மன், பிரம்மாட்சியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வருண ஜெபம் நடந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு ஜெபம் மற்றும் யாகமும் நடைபெற்றது. யாகத்தில் அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விட்டதால் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. இதனால் பலர் பயிர் செய்யாமல் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தக் கொஞ்சம் மழையை நம்பி விவசாயிகள் பயிர் செய்ய முடியாது. அதனால் பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று சோகத்துடன் தெரிவித்தனர்.