திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. பக்தர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்.. முழு விவரம் இதோ!
சென்னை: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் நிலையில், அன்றைய தினம் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

அதன்படி, இக்கோயிலில் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ராஜகோபுரத்தின் அருகில் பிரம்மாண்டமாக 8 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 76 குண்டங்களுடன் யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் ஜூலை 7ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயிலானது 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்படும் ரயிலானது திருநெல்வேலிக்கு மதியம் 12.55 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயிலானது பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், குரும்பூர் மற்றும் ஆறுமுகநேரி உள்ளிட்ட இடங்களில நின்று செல்லும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications