பொங்கல் பண்டிகைக்கு 22 சிறப்பு ரயில்கள்! ஆனாலும் டிக்கெட் கிடைக்கலை!!
சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி, தென் மாவட்டங்களுக்கு செல்வோருக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, துவங்கிய, 10 நிமிடங்களிலே முடிந்தால் சொந்த ஊர் செல்லும் பெரும்பாலான பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு புதன்கிழமை தொடங்கி ஞாயிறு வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. பெரும்பாலோனோர் 9ஆம் தேதி முதலே சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கிவிடுவார்கள். 12,13ஆம் தேதி மட்டும் லீவ் எடுத்துக்கொண்டால் 10 நாட்கள் ஊரில் ஜாலியாக பொங்கலை கொண்டாடுவார்கள்.
எனவே கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகைக்கு, சென்னை - நெல்லை; சென்னை - நாகர்கோவில் இடையே, இரு மார்க்கங்களிலும், 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது.
நெல்லை - சென்னை
நெல்லையில் இருந்து ஜனவரி 8, 9, 12 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூருக்கும் அதேபோல எழும்பூரில் இருந்து 9, 10 ஆகிய தேதிகளில் நெல்லைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நாகர்கோவில் - சென்னை
நாகர்கோவிலில் இருந்து 11ஆம் தேதி சென்னைக்கும், 12-ம் தேதி சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரயில் விடப்படுகிறது.
பிரிமியம் ரயில்கள்
சென்னை எழும்பூரில் இருந்து 13ஆம் தேதி நெல்லைக்கு பிரீமியம் சிறப்பு விரைவு ரயிலும் நெல்லையில் இருந்து 14ஆம் தேதி கரூர், நாமக்கல் வழியாக சென்னை எழும்பூருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். எழும்பூரில் இருந்து 14ஆம் தேதி நெல்லைக்கும், அங்கிருந்து 17ஆம் தேதி சென்னைக்கும் பிரீமியம் சிறப்பு விரைவு ரயில் விடப்படுகிறது.
ஊர் திரும்ப ரயில்கள்
எழும்பூரில் இருந்து நெல்லைக்கு 18ஆம் தேதி இரவு சிறப்பு விரைவு ரயிலும் அதே நாளில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு பிரீமியம் சிறப்பு விரைவு ரயிலும் விடப்படுகிறது. 19ஆம் தேதி எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் 20ஆம் தேதி எழும்பூரில் இருந்து நெல்லைக்கும், அங்கிருந்து 22, 23 ஆகிய தேதிகளில் சென்னைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சிறப்பு ரயில்கள்
நாகர்கோவிலில் இருந்து 25ஆம் தேதி மாலை சென்னைக்கும் மறுநாள் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கும் சிறப்பு விரைவு ரயில் செல்கிறது. எழும்பூரில் இருந்து 27ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை செல்லும்.
மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று 4ஆம் தேதி முதல் தொடங்கியது.
சென்னை எழும்பூரில் இருந்து 23ஆம் தேதி நெல்லை செல்லும் பிரீமியம் சிறப்பு விரைவு ரயிலுக்கு ஜனவரி 8ம் தேதியும் எழும்பூரில் இருந்து 24-ம் தேதி இரவு நெல்லை புறப்படும் பிரீமியம் சிறப்பு விரைவு ரயிலுக்கு 9ஆம் தேதியும் நெல்லையில் இருந்து 26ஆம் தேதி மாலை சென்னை புறப்படும் சிறப்பு விரைவு ரயிலுக்கு 11ஆம் தேதியும் முன்பதிவு தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு கவுண்டர்கள்
நேற்று காலை 8:00 மணிக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. பயணிகளின் வசதிக்காக, முக்கிய ரயில் நிலையங்களில், சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
10 நிமிடத்தில் குளோஸ்
ஆனாலும், இணையதளம் மூலமாக, அதிகமானோர் முன்பதிவு செய்தனர். அதனால், முன்பதிவு துவங்கிய, 10 நிமிடங்களிலேயே, பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.சென்னை எழும்பூர் - நெல்லை இடையே, 9 மற்றும் 10ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.
கட்டணம் அதிகம்
சென்னை - நாகர்கோவில் இடையே, வரும் 12ம் தேதி பிரீமியம் சிறப்பு ரயில், இயக்கப்படுகிறது. இதில், அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், டிக்கெட்டுகள் உள்ளன. சென்னை எழும்பூர் - நெல்லை இடையே இயக்கப்படும் பிரீமியம் சிறப்பு ரயில்களில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.