மதுரையிலிருந்து நாகர்கோவில் வழியாக ஐதராபாத்துக்கு சிறப்பு ரயில் இயக்கம்.. பயணிகள் சங்கம் கண்டனம்
மதுரையிலிருந்து நாகர்கோவில் வழியாக ஐதராபாத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கு தென்மாவட்டங்களுக்கு பயன் இல்லை.
நெல்லை: தெற்கு ரயில்வே அண்மையில் அறிவித்து மதுரையிலிருந்து நாகர்கோவில் வழியாக ஐதராபாத்துக்கு இயக்கிய சிறப்பு ரயிலால் தென் மாவட்ட மக்களுக்கு பயன் எதுவும் தராது என்று கூறி பயணிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே மதுரையிலிருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோவை, ஈரோடு, சேலம் வழியாக ஐதராபாத்துக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்து வெள்ளிகிழமை மதுரையிலிருந்து இயக்கியது. இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கியதால் தென்மாவட்ட பயணிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் கேரளா பயணிகளுக்கு பயன்படும் படியாகவே வழித்தடம் அமைக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளது. கேரளப் பயணிகளுக்காக என திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளம், கோவை வழியாக ஐதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த தினசரி ரயில் போதாது என்று தற்போது மீண்டும் ஒரு ரயிலை கேரளப் பயணிகளுக்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னையிலிருந்து மட்டுமே ஐதராபாத்துக்கு தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் மற்ற எந்த ஒரு பகுதியிலிருந்தும் ஐதராபாத்துக்கு தினசரி ரயில் சேவை கிடையாது. மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்துக்கு நாகர்கோவில் - காச்சுகுடா ரயில், மதுரை - காச்சுகுடா ரயில் ஆகிய இரண்டு ரயில்களும் ராமேஸ்வரம் - ஓக்கா வாராந்திர ரயில் காச்சுகுடா வழியாகவும் இயக்கப்படுகின்றன. இந்த 3 ரயில்களும் தமிழக நகரங்கள் வழியாகவே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தமிழகம் வழியாக இயக்கப்படும் போது திடீரென மதுரையிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் கேரளா வழியாக 1949 கி.மீ தூரம் சுற்று பாதையில் முழுக்க முழுக்க கேரளா பயணிகளுக்காக வேண்டியே இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து ஐதராபாத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் விபரம்
• நாகர்கோவில் - காச்சுகுடா ரயில் - 1264 கி.மீ = 25 மணி 10 நிமிடங்கள்
• மதுரை - காச்சுகுடா ரயில் - 1289 கி.மீ = 25 மணி 10 நிமிடங்கள்
• ராமேஸ்வரம் - ஓக்கா ரயில் - 1206 கி.மீ = 22 மணி 40 நிமிடங்கள்
• மதுரை - ஐதராபாத் சிறப்பு ரயில் - 1949 கி.மீ = 40 மணி 40 நிமிடங்கள்
திருவனந்தபுரத்திலிருந்து ஐதராபாத்துக்கு நேரடியாக செல்ல வேண்டுமானால் மதுரை வழியாக சென்றால்தான் குறைந்த பயண தூரத்துடன், குறைந்த கட்டணத்தில் செல்ல முடியும். தற்போது இந்த ரயிலால் தென் மாவட்ட பயணிகள் அதிக அளவு கட்டணத்தை செலுத்தி, அதிக பயண தூரத்தில்தான் கேரளா வழியாக செல்ல வேண்டியுள்ளது. ஏனென்றால் ரயில்வேத்துறை இந்த வழித்தடத்தில் ரயிலை இயக்கியதால் தென்மாவட்ட பயணிகள் வேறு வழியின்றி இந்த தடத்தில் அதிக கட்டணத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
புதிய ரயில் தமிழகத்திற்கில்லை
நாகர்கோவில் - ஷாலிமர் வாராந்திர ரயில் 2001-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டிலும், திருநெல்வேலி - பிலாஸ்பூர் வாராந்திர ரயில் 2009-10 ரயில்வே பட்ஜெட்டிலும், கன்னியாகுமரி - திப்ருகர் ரயில் 2011-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டு, இந்த ரயிலைப் போல் கேரளா பயணிகளுக்காக வேண்டி இங்கிருந்து புறப்பட்டு கேரளா வழியாக இயங்கி கொண்டிருக்கிறது. கேரளாவில் உள்ள ரயில் நிலையங்களில் இடநெருக்கடியைச் சமாளிப்பதற்காக இந்த ரயில்களை நாகர்கோவிலிருந்தும், திருநெல்வேலியிருந்தும் அனுப்பி நிறுத்தி வைத்துப் பராமரிக்கபடுகின்றன என்பதைத் அறிந்து கொள்ளலாம். நெல்லையும், குமரியும் மலையாளிகளுக்கு ஒரு ரயில் டம்பிங் ஸ்டாண்டு மட்டுமாக பயன்படுகிறதே தவிர தமிழனுக்கு அது ரயில்வே நிலையமாக பயன்படுவதில்லை.
தென்மாவட்ட பயணிகள் தமிழகம் வழியாக புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலோ அல்லது திருவனந்தபுரத்திலிருந்து மங்களுர் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும், திருநெல்வேலி - திருச்சி இன்டர்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் இந்த பாதை ஒருவழிபாதையாக உள்ளது என்ற காரணத்தை காட்டி எந்த ஒரு ரயிலையும் இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வருவதில்லை. ஆனால் இதே ஒருவழிபாதை வழியாக கேரளா பயணிகளுக்கு புதிய ரயில்கள் இயக்குதல் அல்லது சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்குவதில் ஒருவழிப்பாதை, ரயில் பராமரிப்பு முனைய வசதிகள் போன்ற எந்த ஒரு பிரச்சனையும் எழுவதில்லை.
நாகர்கோவில் - கிருஷ்ணராஜபுரம் சிறப்பு ரயில்:
இந்த வருடம் கோடைகால விடுமுறையையொட்டி கிருஷ்ணராஜபுரத்திலிருந்து ஈரோடு, எர்ணாகுளம், திருவனந்தபுரம் வழியாக சிறப்பு ரயிலை கேரளா பயணிகளுக்குகாக ரயில்வே இயக்குகிறது. இதைப்போல் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயிலை அறிவித்து இயக்கியது குறிப்பிடதக்கது. இவ்வாறு இயக்கிய போது இதுகுறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தது என்று கூறுகிறார் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம்.
மத்திய அரசுக்கு கோரிக்கை
இது குறித்து தென்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயில்வே அதிகாரிகளிடமும் ரயில்வே அமைச்சரிடமும் இந்த பிரச்சனையை கவனத்துக்கு கொண்டு சென்று தென்மாவட்ட பயணிகளுக்கு பயன் இல்லாமல் கேரளப் பயணிகளுக்கு பயன்படும் வகையில் ரயில்களை இயக்குவதை நிறுத்த வேண்டும். தமிழகத்திலிருந்து தற்போது உள்ள ஒரே மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.