உச்சநீதிமன்றத்தில் கலைஞர் டிவி தொடர்பான 'ஸ்பெக்ட்ரம்' தொலைபேசி டேப் தாக்கல்: பிரசாந்த் பூஷன்

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஏற்கெனவே அரசியல் தரகர் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் சேர்க்கப்பட்டு அது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கலைஞர் டிவி தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் சில நாட்களுக்கு முன் ஒரு இணையத்தளத்தில் வெளியானது. கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகியான சரத் ரெட்டி மற்றும் காவல்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோர் இடையேயான இந்த தொலைபேசி உரையாடலில், சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய வருவதற்கு முன்பாகவே தாம் 100க்கும் மேற்பட்ட ஆவணங்களில் தான் பின் தேதியிட்டு கையெழுத்திட்டு வருவதாக சரத் ரெட்டி கூறுவது பதிவாகி இருக்கிறது. (ஆனால், இந்த உரையாடலில் பேசுவது ஜாபர் சேட், சரத் ரெட்டி தானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.)
மேலும் சிபிஐ குற்றம்சாட்டுவது போல பணபரிவர்த்தனை நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் உரையாடல்களும் இதில் இடம்பெற்றிருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தொலைபேசி உரையாடலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் மேலும் சில புதிய தொலைபேசி உரையாடல்களை டெல்லியில் இன்று வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் பூஷன், இந்த தொலைபேசி உரையாடல்கள் மிகவும் நம்பகமான இடத்தில் இருந்து பெறப்பட்டவை. இவற்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறோம் என்றார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய அம்சமான பணபரிவர்த்தனை தொடர்பான விவரங்களைக் கொண்ட தொலைபேசி உரையாடல் இது என்பதால் உச்ச நீதிமன்றமும் இதை விசாரணைக்கு உடனே எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications