ஆம் ஆத்மி கட்சியில் உதயகுமார் இணைந்ததற்கு புஷ்பராயன் கடும் எதிர்ப்பு?
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக, அணு உலை எதிர்ப்பாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜ்ரிவால் நெல்லைக்கே நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
பின்பு உதயகுமார் போன்றவர்கள் ‘ஆம் ஆத்மி' கட்சியில் சேர வேண்டும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று இடிந்தகரை கிராமத்தில் கிழக்கு அந்தோணியார் ஆலயத்தில், ‘ஆம் ஆத்மி' கட்சி தமிழக தேர்தல் பணிக்குழு தலைவர் டேவிட் பரூக்குமார் முன்னிலையில், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில், மைபா.ஜேசுராஜ், மில்டன், கெபிஸ்டன், முகிலன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்தனர்.
எங்கள் கருத்தையும், பாதுகாப்பையும் வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் கூடுதல் எம்.பிக்கள் தேவை. அதனால் தான் தேர்தல் பாதையை தேர்வு செய்ய நேரிட்டுள்ளது என விளக்கம் கொடுத்துள்ளார் சுப. உதயகுமார்.
ஆனால் இந்த போரட்டத்தில் முக்கிய நிர்வாகியான புஷ்பராயன் ஆம் ஆத்மி கட்சியில் சேரவில்லை. தமக்கு அரசியல் பாதை தேவையில்லை என்ற கருத்தில் அவர் உறுதியாக உள்ளார்.
இத்தனை ஆண்டுகாலம் உறுதியான போராட்ட தலைமையாக இருந்து வந்த உதயகுமார்- புஷ்பராயன் இடையேயான விரிசலால் இடிந்தகரை மக்கள் கவலை அடைந்துள்ளனர்.