காற்றில் போன கலெக்டர் வாக்குறுதி.. மதுக்கடை திறப்பைக் கண்டித்து கரூரில் முற்றுகைப் போராட்டம்
மதுக்கடை திறக்கப்படாது என்று கலெக்டர் கொடுத்த வாக்குறுதியை மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் வெகுண்டெழுந்த பொதுமக்கள் கரூரில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்: கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி மெயின்ரோட்டில் செயல்பட்டு வந்த மதுபானக்கடை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி மூடப்பட்டது.
சுமார் ஒரு கி.மீ தூரத்தில் காணியாளம்பட்டி-லந்தகோட்டை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு மூடப்பட்டக் கடை தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கடையை அதன் ஊழியர்கள் நேற்று பகல் 12 மணிக்கு திறக்க முயன்றனர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கடையை திறக்கக் கூடாது என்று அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கடையின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்தப் போராட்டம் குறித்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அப்பகுதிவாசிகள், விவசாய வேலைக்காகவும், ஆடு, மாடுகள் மேய்ப்பதற்கும், இங்கு வரும்போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது என்று அச்சம் தெரிவித்தனர்.
கலெக்டரிடம் மனு
மேலும், இதுகுறித்து கடந்த மாதம் மார்ச் 27ம் தேதியே மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த போது, இப்பகுதிக்கு மதுபான கடை வராது என உறுதி மொழி அளித்ததாகவும், இதனை மீறி தற்போது கடையைத் திறக்க முயல்கின்றனர் என்று போராட்டக்கார்கள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளியணை போலீசார், கோரிக்கையை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் மனுவாக மீண்டும் கொடுங்கள் என்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். இதனால் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டம் தொடரும்
ஆனால், சம்பந்தப்பட்ட மதுபானக்கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் போராட்டம் நடக்கும் அபாயம் இந்தப் பகுதியில் உருவாகியுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. பொதுமக்களும் இந்தக் கடையை நடத்த விடமாட்டோம் என்று உறுதியாக உள்ளனர்.