இலங்கை தேர்தல் முடிவால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது: ராமதாஸ்
சென்னை: இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவால் ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவது இல்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ரனில் விக்கிரமசிங்கே பிரதமராவது உறுதியாகிவிட்டது. தேர்தலில் தமிழர்களுக்கு சாதகமான அம்சம் ஏதேனும் உண்டு என்றால், அது முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட தோல்வி தான்.
தங்களுக்கு எதிராக செயல்படுவார் என்று தமிழர்கள் அஞ்சிய சூழலில் ராஜபக்சே தோல்வியடைந்திருப்பது ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது. இதைத்தவிர வேறு எந்த நன்மையும் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லை என்பது தான் உண்மையாகும்.
சிங்களர்களை ஆதரிக்கத் தயாரில்லை என்பதை தமிழர்களும், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கத் தயாராக இல்லை என்பதை சிங்களர்களும் தெரிவித்திருக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் தமிழர்கள் தொடர்ந்து கொத்தடிமைகளாகவே வாழ நேரிடும். இதன் பிறகும் இரு இனத்தினரும் ஒன்றாக வாழ்வது பொருந்தா கூட்டணியாகவே இருக்கும். எனவே, உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தனித்தமிழீழம் அமைக்க ஐ.நா. அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தான் இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications