'இலங்கை போர்க்குற்றங்களில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்'
சென்னை: இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான போர்க் குற்றங்களில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஆற்றிய உரையில் ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபையில் புதன்கிழமையன்று ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைக்குக் காரணமானவர்களைப் பொறுப்பாக்காமல் நல்லிணக்கம் குறித்த சர்வதேசத் தீர்மானங்களையும், உணர்வுகளையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் இலங்கை அரசின் போக்கினைக் கண்டு உலகெங்கிலும் உள்ள தமிழினம் வெகுண்டெழுந்துள்ளது.

இதைத் தணிக்கும் விதமாக, அன்றைய இலங்கை அரசு புரிந்த போர்க் குற்றங்கள், ஜெனிவா ஒப்பந்த விதிமீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த அரசு எடுத்த தொடர் முயற்சி நினைவு கூறத்தக்கது.
இலங்கைத் தமிழர்கள் மீது இத்தகைய கடுங் குற்றங்களைப் புரிந்தவர்கள் உரிய நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு நீதியை நிலைநாட்டிட வேண்டுமென்று இன்றைய இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வற்புறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மாமன்றத்தில் இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, தமிழர்களுக்கு அவர்களின் நிலங்களைத் திரும்ப அளித்து அவர்கள் சம வாழ்வுரிமையுடன் கண்ணியமாகவும், அமைதியாகவும் வாழ ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டுமென இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.
இவ்வாறு ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications