மீண்டும் 26 தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்தது சிங்கள கடற்படை!
மண்டபம்: தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 26 மீனவர்களை சிங்கள கடற்படையினர் நேற்று சிறை பிடித்துச் சென்றனர்.
ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து செல்லும் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைப்பிடிப்பதும், தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
ஏற்கனவே 216 தமிழக மீனவர்கள் நீண்ட காலமாக இலங்கை சிறையில் துயருறும் நிலையில், கடந்த 29-ந்தேதி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 22 பேர் சிறை பிடித்துச்செல்லப்பட்டனர்.
அடுத்த நாளே (டிச.30) பாம்பனைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 18 பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தை சேர்ந்த 256 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடைய 81 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.
மேலும் 26 மீனவர்கள்
இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மேலும் 26 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச்சென்றது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து நேற்று காலை சுமார் 150 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது விஜயன், முகமது அப்துல்காதர், அந்தோணி, தேர்ஜின் ஆகியோருக்குச் சொந்தமான 5 படகுகளை அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர்.
அந்த படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை பறிமுதல் செய்ததுடன், படகுகளில் இருந்த விஜயன், தேர்ஜின் ஆகிய படகு உரிமையாளர்கள் இருவர் உள்பட 26 மீனவர்களையும் கடற்படையினர் சிறை பிடித்தனர். பின்னர் அவர்களை கல்பட்டி கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பாம்பன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருவதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேசுவரம் பகுதியில் 5000க்கும் அதிகமான மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.