மெடிக்கல் மிராக்கிள்.. கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களுக்கு உணவுகொடுத்து உபசரித்த இலங்கை கடற்படை
புதுக்கோட்டை: நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்டு அவர்களுக்கு உணவளித்தத இலங்கை கடற்படையினர், மீனவர்களை பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த செயல் தமிழக மீனவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுகோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் இருந்து ரெங்கநாதன் என்பவருக்கு சொந்தமாக விசைப்படகில் சென்ற 4 மீனவர்கள் நேற்று ஆழ் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இதனிடையே படகு திடீரென பழுதானதையடுத்து, அவர்கள் நடுக்கடலில் தவித்ததாக கூறப்படுறது.
அப்போது, அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீட்டு இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளார்களாம். மேலும், அங்கு தமிழக மீனவர்களுக்கு உணவளித்த அவர்கள், பழுதான படகினை சரி செய்து தமிழகத்திற்கு திரும்ப அனுப்பியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், சிறைபிடிப்பதும் போன்றவற்றையே செய்து வந்த இலங்கை கடற்படையினர் தற்போது முதல் முறையாக மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டது மீனவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை எப்போதும், தொடர்ந்தால் இந்தியா-இலங்கை இடையே மீனவர்கள் பிரச்சனை இருக்காது என்று மீனவர்கள் கருதுகின்றனர்.