ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் விவசாயம் செய்யும் பி.எஸ்.சி. பட்டதாரி
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் என். ஆனந்த் கடந்த தேர்தலில் இதே தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவரது முதல்வர் பதவியும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியும் பறிபோனது. இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் திமுக தலைவர் கருணாநிதி தங்கள் கட்சியின் வேட்பாளர் பெயரை அறிவித்துவிட்டார். திமுக சார்பில் ஸ்ரீரங்கத்தில் என். ஆனந்த் போட்டியிடுகிறார்.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை அடுத்து உள்ள அல்லித்துரை பக்கம் இருக்கும் சாந்தபுரத்தைச் சேர்ந்தவர் என். ஆனந்த்(34). அவரது தந்தை நாகராஜன், தாய் பாப்பாத்தி. பி.எஸ்.சி. படித்துள்ள ஆனந்த் குடும்ப தொழிலான விவசாயம் செய்து வருகிறார். அவருக்கு சவுமியா(29) என்ற மனைவியும், அஷிந்தா(4) என்ற மகளும் உள்ளனர்.
திருச்சி மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக ஆனந்த் உள்ளார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஆனந்த். இந்நிலையில் தான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஆனந்துக்கு கிடைத்துள்ளது.