பிரியாணி போட்டு பெற்ற வெற்றியைக் கொண்டாட எப்படித்தான் மனசு வருகிறதோ.. கனிமொழி கிண்டல்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் அதிமுக தோற்றிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார் திமுக மகளிரணி செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி.
நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அதிமுக அதிக வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது.
இது தொடர்பாக திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கூறியதாவது : ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், ஏதோ அபார வெற்றி பெற்று விட்டது போல, ஆளுங்கட்சியினர் கொண்டாடி தீர்க்கின்றனர். அவர்கள் மாபெரும் தலைவராக மதிக்கும் மக்கள் முதல்வரின் செல்வாக்கால்தான், இந்த வெற்றி கிடைத்தது என அவர்கள் ஏன் கூவவில்லை.
அப்படியென்றால், அந்தம்மா இல்லாமலேயே எங்களால் இத்தனை பெரிய வெற்றியை பெற முடியும் என, ஆளுங்கட்சியினர் சொல்லி, அதை கொண்டாடுகின்றனரா? ஜெயலலிதாவின் செல்வாக்கு என்பதெல்லாம் சும்மா என்பதை ஆளுங்கட்சியினர் ஒப்புக் கொள்கின்றனரா? அ.தி.மு.க., பக்கம்தான் மக்கள் இருக்கின்றனர் என்றால், முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் திருச்சிக்கு சென்று பணம் கொடுத்து, ஓட்டுகளை விலைக்கு வாங்க சொன்னது ஏன்?
நியாயமாக தேர்தல் நடந்திருந்தால், அ.தி.மு.க., தோற்றிருக்கலாம். 29 அமைச்சர்கள் தொகுதிக்குள் சென்று உட்கார்ந்து கொண்டு, மட்டன் பிரியாணி சமைத்துப் போட்டு, பணம் கொடுத்து ஓட்டை வாங்கி கிடைத்த வெற்றி எப்படித்தான், மனசு வந்து கொண்டாடுகின்றனரோ?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.