மீண்டும் கொலை மிரட்டல் கடிதம்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பதில் என்ன தெரியுமா?
ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லியுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. கொலை மிரட்டலை ஆண்டாளும் அரசும் பார்த்துக் கொள்வார்கள் என்று ஜீயர் பதில் அளித்துள்ளார்.
ராஜபாளையத்தில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து இந்து கடவுளான ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் கண்டனம் தெரிவித்தார். மேலும் வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதமும் இருந்தார்.
பின்னர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஜீயர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அந்த சமயத்தில் அவருக்கு போனில் கொலை மிரட்டல் வந்தது. இதனையடுத்து பிப்ரவரி மாதம் 3ம் தேதி வரை வைரமுத்துவிற்கு அவகாசம் கொடுத்து உண்ணாவிரதத்தை ஒத்திவைத்தார்.

உண்ணாவிரதம் இருந்த ஜீயர்
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவித்த ஜீயர், பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட கோரிக்கை விடுத்ததையடுத்து 2வது முறையும் பாதியிலேயே உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

திருச்சியில் இருந்து வந்த மிரட்டல்
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாகவே ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு தொலைபேசி வாயிலாகவும் கடிதம் வழியாகவும் மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி, பாலக்கரை, பெரியார்நகர், டாக்டர் அம்பேத்கார் மற்றும் பெரியார் தலித் கூட்டமைப்பு என்று விலாசமிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கொலை செய்ய தயங்க மாட்டோம்
எங்களைப்பற்றி ஏதாவது பேசினால் கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் என்பவரின் பெயரில் 2வது முறையாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

அரசு பார்த்துக்கொள்ளும்
கொலை மிரட்டல்கள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கூறியதாவது : ஒரு மாதத்தில் தொடர்ந்து மிரட்டல் கடிதம் வந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் மிரட்டல் கடிதங்களுக்கு பயப்படவில்லை, நாங்கள் நம்பும் ஆண்டாள் எங்களுடன் இருக்கும் வரை எந்த பயமும் கிடையாது. கொலை மிரட்டல்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது, அதனை அரசு பார்த்துக் கொள்ளும் என்றும் ஜீயர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications