போராட்டம் நடத்திய 10 நாட்களுக்கும் சம்பளம் வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 10 நாள் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் போராட்ட விளக்கக் கூட்டம் மற்றும் சர்வதேச மகளிர் தின விழா கடலூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்ச்செல்வி கூறுகையில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணியிடங்களை நிரப்புதல், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம்.
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்.19-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா விதி எண்.110-ன் கீழ் எங்களது கோரிக்கையில் 11 கோரிக்கைகளுக்கு அறிவிப்பு வெளியிட்டார். இதில் தற்போது 8 கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஆராய வல்லுநர் குழு அமைத்தல், காலமுறை ஊதியம் பெறுவோர் பிரச்சினை, நிர்வாகத் தீர்ப்பாயம் மீண்டும் அமைத்தல் குறித்து அரசாணை வெளியிடப்படவில்லை. இதனை உடனடியாக வெளியிட வேண்டும் என்றார்.
மேலும் தற்போது தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளதால், போராட்டத்தை தள்ளி வைப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட 10 நாட்களுக்கு பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications