ஜெ. மரணத்திற்கு சசிகலா குடும்பமே காரணம் என மக்கள் நினைக்கின்றனர் - ஸ்டாலின்
ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பமே காரணம் என மக்கள் நினைக்கின்றனர் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பமே காரணம் என மக்கள் நினைக்கின்றனர் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின்,கடந்த 9 மாத காலமாக தமிழகம் எந்த நிலையில் உள்ளது என்று மக்களுக்கு தெரியும்.
அண்ணா மருத்துவமனையில் இருந்த போது அரசு சார்பில் சிகிச்சை குறித்து அறிக்கை தரப்பட்டது. ஜெயலலிதா மறைவு என்ற தகவல் கூட குழப்பமான நிலையில் வெளியிடப்பட்டது. இதனிடையே சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
அதற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் தன் பதவியை ராஜினாமா செய்தார். திடீரென்று ஒரு நாள் பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த பிறகு வலுக்கட்டாயமாக என்னை ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்றார். சசிகலா குடும்பம் குறித்து 10 சதவிதம் மட்டும்தான் கூறினேன். 90சதவிதம் இன்னும் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். எனவே ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பமே காரணம் என மக்கள் நினைக்கின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.