யூகங்களை எழுப்பி கூட்டணியைக் கலைத்துவிடாதீர்கள்.. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக யூகங்களை எழுப்பி கூட்டணியைக் கலைத்து விடாதீர்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேமுதிக தனது கூட்டணியில் சேர்க்க ஆரம்பம் முதலே திமுக தீவிரமாக முயன்று வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஆரம்பித்த முயற்சி இது. அப்போது அது பலிக்கவில்லை. லோக்சபா தேர்தலின்போதும் முயற்சித்தது. அப்போதும் முடியவில்லை.

இந்த நிலையில் இப்போது சட்டசபைத் தேர்தலுக்கு எப்படியாவது தேமுதிகவை இழுத்து விடுவது என்பதில் திமுக படு தீவிரமாக உள்ளது. இதற்காக விஜயகாந்த்தை இழுக்க மிகக் கடுமையாக முயன்று வருகிறது திமுக. திமுகவினர் பலரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தேமுதிக தரப்பில் பேரம் பலமாக இருப்பதால் திமுகவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் திமுக தரப்பில் 59 தொகுதிகளை தேமுதிகவுக்குத் தருவதாகவும், இந்தப் பேரம் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் இதெல்லாம் வதந்தி என்று முதலில் விஜயகாந்த் கூறினார். பின்னர் அக்கட்சியின் இன்னொரு தலைவரான வி.சி.சந்திரகுமார் என்பவர், யாரும் செய்திகளை நம்ப வேண்டாம். விஜயகாந்த் யாருடனும் பேரம் பேசவில்லை. அவரே அறிவித்தால்தான் அது அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்று விளக்கி அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலினும் இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ளார். திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஸ்டாலினிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கூட்டணி தொடர்பாக தலைவர் கருணாநிதி விரைவில் அறிவிப்பார். யூகங்களை எழுப்பி கூட்டணியை கலைத்து விட முயற்சி செய்ய வேண்டாம் கூட்டணி அமைந்து விடாமல் போக நீங்கள் காரணமாக இருந்து விடாதீர்கள் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications