62 வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுங பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுங்கள்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: தனது பிறந்தநாளை ஆடம்பரமின்றி எளிமையாக கொண்டாடுங்கள் என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காலந்தோறும் திருப்பு முனையை உருவாக்கிடும் கழகத்தின் சாதனைத் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில், தீரர்கள் கோட்டமாம் திருச்சி மாநகரில், கழகத்தின் பத்தாவது மாநில மாநாடு திராவிட இயக்க வரலாற்றின் வைர அத்தியாயமாகி, மாபெரும் வெற்றி மாநாடாக நடந்தேறியிருக்கிறது.

திருச்சியில், எங்கெங்கு காணினும் எழுச்சியடா - தம்பி! ஏழுகடல் வந்து புகுந்ததடா - என்று பாவேந்தர் பாணியில் பரணி பாடிடும் வண்ணம், திக்கெட்டுமிருந்து இதயக் கிளர்ச்சியுடன் வந்த இலட்சோப இலட்சம் கழகத் தோழர்களால் ‘கின்னஸ்' ஆவணத்தில் இடம்பெறக் கூடிய அளவுக்குப் பேசப்படும் மகத்தான சரித்திர நிகழ்வு இந்த மாநாடு. கற்பனைக்கும் எட்டாத இந்த அற்புதத்தைப் படைத்த என்னரும் சோதரர்கள் அனைவர்க்கும் நன்றி,
நன்றி என்று பல்லாயிரம் முறை பகன்றாலும் என் நெஞ்சில் நிறைவு ஏற்படாது.
1-3-2014 அன்று எனது பிறந்தநாளையொட்டி ஆர்வம் மிகுதியால், ‘பிளக்ஸ்' போர்டுகள், விளம்பரச் சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், பதாகைகள், பேனர்கள் போன்றவற்றை வைத்து என்னைச் சங்கடப்படுத்திவிட வேண்டாம் என்று கழகத் தோழர்களை மிகுந்த கனிவுடனும், கண்டிப்போடும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இத்தகைய கண்ணுறுத்தும் விளம்பரங்கள் கட்டாயம் தவிர்க்கப்படுதல் வேண்டும். அடக்கமும், அமைதியும் பெரிதும் விரும்பத்தக்கவை; ஆடம்பரமும், ஆரவாரமும் மிகவும் வெறுக்கத்தக்கவை.
உற்சாகமும் உத்வேகமும் கட்டுக் கடங்காமல் போய்விடுமானால், காட்டாற்று வெள்ளம் போல் எதற்கும் பயனற்று, பாயும் வேகத்திலேயே வடிந்துவிடும். இனிது இனிது எளிமை இனிது; அதனினும் இனிது வலிமையில் எளிமை.
இப்போது நமது நிலையும் நினைப்பும் வரும் நாடாளுமன்றத் தேர்தல் பற்றியதாகவே இருந்திட வேண்டும். திருச்சியில் நாம் உருவாக்கி இருக்கும் திருப்பு முனை, நீடித்து நிலைத்திருக்க வேண்டுமானால், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், அடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெரும் வெற்றியைப் பெற்றாக வேண்டும்.
நமது நோக்கத்தைச் சிதறவோ சிதையவோ விடாமல், வில்லாளன் அர்ச்சுனன் வைத்த அம்புக் குறியைப் போல், ஒருமுகப்படுத்தப் படவேண்டும். பிறந்த நாளையொட்டி, சமுதாயத்தில் மெலிந்து நலிந்த பிரிவினரான ஏழை எளிய மகளிர், முதியோர், அனாதைச் சிறுவர் - சிறுமியர், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் நலன் பேணும் வகையில் இயன்ற உதவிகளை ஆங்காங்கே இளைஞர் அணியினர் உள்ளிட்ட கழகத் தோழர்கள் செய்வதும்; இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டங்களின் மூலம் பிரச்சாரப் பணியை
மேற்கொள்வது;,கழகக் கொடிகளைப் புதுப்பிப்பது - புதிய கொடிகளை ஏற்றி வைப்பது - கிளைக் கழகங்களின் பெயர்ப் பலகைகளைப் புதுப்பிப்பது செய்யவேண்டும்.
அண்ணா, கலைஞர் பெயர்களில் அமைந்துள்ள படிப்பகங்களுக்குப் பயனுள்ள புதிய நூல்களை வழங்குவது - கழகத்தின் மூத்த உறுப்பினர்களைச் சிறப்பிப்பது போன்றவற்றை ஆற்றுவதும்; ஆகிய ஈரம் நிறைந்த, இயக்கத்திற்கு ஆக்கமளித்திடும் இத்தகைய செயல்பாடுகளையே நான் பெரிதும் விரும்பி வரவேற்கிறேன்; இவையே எனது இதயத்தில் இதம் கூட்டுபவை ஆகும். சமூக உணர்வும், இயக்கப் பற்றும் மிளிரும் இந்தக் காரியங்கள் பெருவாரியாக நிகழுமானால், பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்வேன்.
அடக்கத்தைக் கடைப்பிடிப்பீர்! ஆடம்பரத்தைத் தவிர்ப்பீர்! இந்த எனது எளிய வேண்டுகோளை எல்லோரும் நினைவில் கொள்வீர் இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்..












Click it and Unblock the Notifications