சட்டசபையில் மக்கள் பிரச்சினை பற்றி பேச அனுமதி மறுப்பு: வெளிநடப்பு செய்த ஸ்டாலின் புகார்
சென்னை: தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மரணம், காவிரியில் தடுப்பணை, உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க சட்டசபையில் அனுமதிக்க மறுப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தங்கள் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை என கூறி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், 'காவிரியின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை, ஆவின் பால் முறைகேடு, தருமபுரி குழந்தைகள் இறப்பு, முதியோர் உதவித் தொகை நிறுத்தம், டெங்கு காய்ச்சல் பரவுதல் என ஏராளமான முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே, கூட்டத் தொடரை 5 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம், ஆனால், சபாநாயகர் எங்கள் கோரிக்கை எதையும் ஏற்கவில்லை. அதனால் வெளிநடப்பு செய்துள்ளோம்,' என்றார்.

மேலும் அவர், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைகள் பெருகிவிட்டன. பாலியல் பலாத்காரம் அதிகரித்துவிட்டது. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications