சென்னையின் பேரழிவும் முதல்வரின் ஆணைக்கிணங்கவே நடந்துள்ளது: மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் அனைத்து செயல்களுமே முதல்வரின் ஆணைக்கிணங்கவே நடைபெறுகிறது. இந்த வெள்ள பாதிப்பும் முதல்வரின் ஆணைக்கிணங்கவே நடந்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 36 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து உண்மை நிலையை மக்களுக்கு உணத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். சிந்தாதிரிப்பேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் 50 சென்டி மீட்டர் மழை பெய்யும் என்று எச்சரித்திருந்தபோதும் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.

தொடர்பு எல்லைக்கு அப்பால்
டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்னரே தண்ணீரை திறந்துவிடுவதுதான் சரியாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகரிகள் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்த நிலையில், 2 நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முடியாதநிலை இருந்ததாக ஸ்டாலின் தெரிவித்தார்.

இரவோடு இரவாக தண்ணீர் திறப்பு
செம்பரம்பாக்கம், பூண்டி, ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ள நிலையில் அதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமைச் செயலாளரிடம் விரிவாக எடுத்து கூறியும் அது பற்றி உடனடி முடிவு எடுக்காமல் இருந்துள்ளனர். யாருடைய உத்தரவுக்கோ எதிர்பார்த்திருக்கிறார்கள். இரவோடு இரவாக ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர்.

முதல்வரின் ஆணைக்கிணங்க
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் இரவோடு இரவாக திறந்து விட்டதே அதிக உயிரிழப்பு பொருள் சேதம் ஏற்பட காரணமாகி விட்டது. இதற்கு தமிழக அரசே காரணம். இங்கு எல்லாமே முதல்வரின் ஆணைக்கினங்க மட்டுமே நடப்பதாகவும், இந்த பேரழிவும் முதலமைச்சரின் ஆணைக்கிணங்கவே நடைபெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

வெளிப்படையாக அறிவிப்பார்களா?
செம்பரம்பாக்கத்தில் இருந்து முன் அறிவிப்பு இன்றி அதிக அளவு தண்ணீர் திறக்க யார் காரணம்? என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் நிவாரணங்கள் முழுமையாக சென்றடையவில்லை. அதனால்தான் தொண்டு நிறுவனங்களும், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பெருமளவு உதவி செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications