தேமுதிக, தமாகா உடைய வைகோ தான் காரணம்... மு.க.ஸ்டாலின் 'அட்டாக்'
சென்னை: தேமுதிக, தமாகா கட்சிகள் உடைவதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோதான் காரணம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் மு.க.ஸ்டாலின் 3-வது நாளாக சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அ.தி.மு.க. ஆட்சியால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது:
தேமுதிகவை தொடர்ந்து தமாகாவில் இருந்தும் நிர்வாகிகள் வெளியேறுகிறார்கள். ஏற்கனவே தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததால் உடைந்தது. இப்போது தமாகா இணைந்ததும் அந்த கட்சியும் உடைய ஆரம்பித்துள்ளது.
ஆனால் கருணாநிதியும், ஸ்டாலினும் திட்டமிட்டு, ஏதோ பல கோடி ரூபாய் கொடுத்து அந்த கட்சியை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று வைகோ சொல்லி கொண்டு இருக்கிறார்.
தமாகா, தேமுதிக இருந்தாலும் அவற்றை உடைப்பதற்கு யார் காரணம் என்று கேட்டால் என்னை பொறுத்தவரையில் வைகோ தான் காரணம். இந்த கட்சிகளை எல்லாம் அங்கு கொண்டு சென்று சேர்க்காமல் இருந்தால் அவை உடைந்திருக்காது. எனவே அவர்தான் அவற்றை உடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது என்னுடைய குற்றச்சாட்டு.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications