For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளதாக ஜெயலலிதா பொய் பிரசாரம் செய்கிறார்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

By Karthikeyan
Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும், அமைதி பூங்காவாக இருப்பதாக கூறி ஜெயலலிதா பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நெல்லை மற்றும் பாளையங்கோட்டை திமுக வேட்பாளரை ஆதரித்து அவர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், லஞ்சம் வாங்கித் தரவில்லை என்பதற்காக வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமியை மிரட்டி தற்கொலை செய்ய வைத்த ஆட்சி ஜெயலலிதா ஆட்சி என்று குற்றம்சாட்டினார்.

 stalin campaign at Tirunelveli

மேலும் இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதையும், குறிப்பாக தென் மாவட்டங்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதையும் பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைத்தேன். அருகாமை மாவட்டமான தூத்துக்குடியில் மட்டும் ஒரு மாதத்திற்குள் 100 -க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. அதுகுறித்து விசாரிக்க சிறப்பு டிஜிபி ஒருவர் முகாமிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கொலைகள் 60.8% அதிகரித்துள்ளது. கொலை முயற்சிகள் 42.2% அதிகரித்துள்ளது. பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் 61.1% அதிகரித்துள்ளது. பெண்கள் கடத்தல் 56.5% அதிகரித்துள்ளது. கொள்ளைச் சம்பவங்கள் 195% அதிகரித்து பொதுமக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, கரூர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகரின் வீட்டில் இருந்து ரூ.4.8 கோடியை பறிமுதல் செய்த காவல் கண்காணிப்பாளரை கொல்வதற்கான முயற்சி இன்று நடந்தேறியுள்ளது. ஆக, அதிமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல அரசு ஊழியர்கள் இன்றைக்கு கடுமையான அதிருப்தியில் இருப்பதையும் நான் பொதுமக்களிடையே சுட்டிக்காட்டினேன். அவர்களது நலனில் அதிமுக அரசு சிறிதும் கவனம் செலுத்தவில்லை. சத்துணவு அமைப்பாளர்கள் முதல் செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைத்துத்துறைகளைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களும் கடந்த 5 ஆண்டுகளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பலவிதப் போராட்டங்களில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர். அரசு ஊழியர்களின் நலனில் கவனம் செலுத்தாத எந்த அரசாங்கமும் செயல்படவே முடியாது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 8-வது ஊதியக்குழுவை அமைக்க இருக்கிறோம். அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால் அவர்களது குடும்ப நல நிதி ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயத்தப்படும். அதிமுக அரசினால் வேலைகளை இழந்த மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள். அரசு ஊழியர்களின் சொந்த மாவட்டங்களில் அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும். அரசுப் பணியில் 25 ஆண்டுகள் சிறப்புறப் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகைகள் வழங்கப்படும்.

அரசு ஊழியர்களை வலுக்கட்டாயமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளும் அதிமுகவின் அரசு போல நாங்கள் இருக்கமாட்டோம். அனைத்துத் தரப்பினரின் நல்வாழ்வையும் ஒருங்கே பேணும் அரசாக திமுக அரசு திகழும். உங்கள் நல் ஆதரவுடன், மிக அருகாமையில் புதிய விடியல் காத்திருக்கிறது

English summary
DMK treasurer stalin election campaign at Tirunelveli
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X