ஊழல் செய்யவில்லை என தாய் மீது சத்தியம் செய்ய தயாரா? ஜெ.வுக்கு - ஸ்டாலின் சவால் !
சென்னை: ஊழல் செய்யவில்லை என தாய் சந்தியா மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சத்தியம் செய்யத் தயாரா என திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்வடைய உள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் மீண்டும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். வீதி வீதியாக நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்து வரும் ஸ்டாலின், அதன் ஒரு பகுதியாக மாலையில் பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அதன் பின்னர் தாம்பரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா இந்த மாவட்டத்துக்கு வந்து குறைகளை கேட்டதுண்டா என கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழகத்தின் எந்த மாவட்டத்துக்கும் சென்று மக்கள் குறைகளை ஜெயலலிதா கேட்டதில்லை என்று தெரிவித்தார். மேலும், அவர் செல்வது ஒரே ஒரு மாவட்டம் தான் அது உங்களுக்கு தெரியும். தேர்தல் வந்துவிட்டதால் இப்போது மக்களைத் தேடி வருகிறார் ஜெயலலிதா என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் துப்புரவுப் பணியாளர் பணிக்கு தலா 1 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். ஊழல் செய்யவில்லை என தாய் சந்தியா மீது ஜெயலலிதா சத்தியம் செய்யத் தயாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து சோழிங்கநல்லூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.