சபாநாயகரை கண்டித்து மட்டுமே வெளிநடப்பு... விவாதத்தில் பங்கேற்போம் - ஸ்டாலின்
ஆளுநரின் கடிதத்தை படித்து காட்டாத ஆளுநரை கண்டித்து மட்டுமே வெளிநடப்பு செய்துள்ளதாகவும், விவாதத்தில் பங்கேற்போம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை தக்க வைக்க அதிமுக எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில், சபாநாயகர் தனபாலின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சபாநாயகரை கண்டித்து மட்டுமே வெளிநடப்பு செய்ததாகவும், மற்றபடி விவாதத்தில் பங்கேற்போம் என்றும் அவர் கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பின்னர் நேரமில்லா நேரத்தில் பேசிய ஸ்டாலின், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை தக்க வைக்க ஆளுங்கட்சி மற்றும் அதிமுக தோழமை கட்சி எம்எல்ஏக்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
சட்டசபை விதிப்படி ஆளுநரின் செய்திகளை சபாநாயகர் படித்து காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால் விதிகளை எடுத்து கூறியும் சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கடிதத்தை படிக்கவில்லை
வெளிநடப்பிற்கு பின் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்எல்ஏக்கள் பேரவிவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவிடமிருந்து வந்த செய்தியை சபாநாயகர் படித்து காட்டவில்லை என்றார்.

சபாநாயகரிடம் விளக்கம்
மேலும் இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சபாநாயகரிடம் விளக்கம் கேட்டோம். ஆனால் அது குறித்து அவையில் கூற முடியாது என சபாநாயகர் மறுத்து விட்டார். விதிகளில் இடம் உள்ளது என்றும் கூறினோம்.

திறந்த ஆவணம் இல்லை
ஆளுநரின் கையெழுத்துடன் வரும் கடிதத்தை தான் படித்து காட்ட முடியும், ஆளுநரின் முதன்மை செயலர் அனுப்பிய கடிதத்தை எல்லாம் என படித்து காட்ட முடியாது என்று தனபால் மறுத்து விட்டார். சிடி விவகாரம் தொடர்பாக ஆளுநர் தமக்கு எழுதியது திறந்த ஆவணம் இல்லையென்றும் கூறி விட்டார் சபாநாயகர். எடப்பாடி பழனிசாமி அரசு மீது பணபேரம் பேசப்பட்டு முறைகேடாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துள்ளது.

கண்டித்து வெளிநடப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பில் சாதகமாக வாக்களிக்க அதிமுக எம்எல்ஏக்கள் விலை பேசப்பட்டது தொடர்பான காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. இது தொடர்பான சிடியுடன் ஆளுநரிடம் முறையிட்டோம். அவர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டார். ஆனால் ஆளுநர் அனுப்பிய கடிதத்தை அவையில் படித்து காட்ட சபாநாயகர் மறுத்து விட்டார். இதனை கண்டித்தே நாங்கள் வெளி நடப்பு செய்தோம்.

விவாதத்தில் பங்கேற்பு
சபாநாயகரை கண்டித்து மட்டுமே வெளிநடப்பு செய்கிறோம். மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications