கன்னட அமைப்புகளின் போக்கு திட்டமிட்ட சதியாக தோன்றுகிறது.. மு.க.ஸ்டாலின் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூரில் கன்னட அமைப்புகள் தமிழர்கள் மீது நடத்திய தாக்குதல் திட்டமிட்ட சதியாக தோன்றுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இரு மாநில உறவுகளைக் கெடுக்கும் வகையில் நடத்தப்பட்ட சதியாக தோன்றுகிறது என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், தமிழர்கள் நடத்தும் நிறுவனங்கள், ஹோட்டல்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் தொழில் ஆதாரத்தைத் தகர்க்கும் வகையில் தாக்கியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது இந்தத் தாக்குதல் திட்டமிட்ட சதியாகவே தெரிகிறது என்றும் சாடியுள்ளார்.

Stalin condemned to Karnataka Violences

இதுதொடர்பாக ஸ்டாலின் தனது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவேரியிலிருந்து வருகின்ற செப்டம்பர் 20 ஆம் தேதி வரை தினமும் 12,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கண்ணில் கண்ட வாகனங்களை எல்லாம் தாக்கும் சில கன்னட அமைப்புகளின் போக்கு இரு மாநில நல்லுறவுகளை சீர்குலைக்கும் திட்டமிட்ட சதிச் செயல் என்றே எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக தமிழர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்துவது தமிழர்களின் தொழில் ஆதாரத்தை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இறுதி தீர்ப்பின் படி காவேரியில் ஜூன் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் 134 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டியது கர்நாடக அரசின் கடமை என்ற போதிலும், அந்த தண்ணீரை திறந்து விட அம்மாநில அரசு அடம்பிடித்து வந்தது தமிழக விவசாயிகளின் நலனைப் புறக்கணிக்கும் செயலாக அமைந்தது. இத்தனைக்கும் தமிழக விவசாயிகள் சார்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தாராமைய்யா அவர்களை நேரில் சந்தித்து முறையிட்ட பிறகு கூட அம்மாநில அரசு தண்ணீர் திறக்க முன் வரவில்லை.

மேட்டூர் அணை உரிய காலத்தில் காவிரி டெல்டா விவசாயிகளின் நீர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் உருவாகி தமிழக விவசாயிகள் பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகும் கூட கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுத்தது.

இந்நிலையில் தமிழக விவசாயிகளின் அடுத்தடுத்த போராட்டங்கள், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் போராட்டங்ளின் விளைவாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. உச்சநீதிமன்றத்தில் காவேரி தண்ணீர் திறப்பது தொடர்பான வழக்கு விசாரணையின் போது கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பாலி நரிமன் "செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து 12 ஆம் தேதி வரை தினமும் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடத் தயார்" என்று உச்சநீதி மன்றத்திலேயே தெரிவித்தார்.

தமிழக அரசு, மற்றும் கர்நாடக மாநில அரசு தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் முதல் கட்டமாக 10 நாட்களுக்கு தினமும் 15000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக மாநில அரசுக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி உத்தரவிட்டது. காவேரி மேற்பார்வைக்குழுவில் முறையிட வேண்டும் என்று தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவு இப்போது மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 20 ஆம் தேதி வரை தினமும் 12 ஆயிரம் கன அடி திறந்து விட வேண்டும் என்று செப்டம்பர் 12ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நிறைவேற்றுவது தான் அரசியல் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டிய கர்நாடக மாநில அரசின் கடமையுமாகும். இரு மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி, இரு மாநில வழக்கறிஞர்களின் வாதப் பிரதிவாதத்தை கேட்ட பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் என்றால் இது விவசாயிகளின் நலன் சார்ந்த் உத்தரவு என்பதை கர்நாடக அரசு உணர வேண்டும்.

காவிரி டெல்டா விவசாயிகளின் "சம்பா" சாகுபடியை முற்றிலும் பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்ததில் எவ்வித நியாயமும் இல்லை என்பதைத் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிப்படுத்தியிருக்கிறது. ஆகவே உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அச்சுப்பிசகாமல் நிறைவேற்றி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு திறந்து விட வேண்டும். "கர்நாடக மாநில அரசுக்கு மட்டுமின்றி, அங்கு வாழும் மக்களுக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் கடமையிருக்கிறது" என்பதை உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியிருப்பதை கர்நாடக மாநில அரசு மனதில் நிலைநிறுத்தி உடனடியாக தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பை அளித்திட கர்நாடக மாநில அரசு உடனடியாக முன் வர வேண்டும். இதனை வலியுறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. மத்திய அரசு பாராமுகமாக இருப்பதோ பாரபட்சமாக இருப்பதோ இந்தியாவின் ஓர் அங்கமான தமிழகத்திற்குத் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்தின் அடிப்படை உரிமையான காவிரி நீரை உச்சநீதிமன்ற உத்தரவின்படி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்குத் திமுக துணை நிற்கும் என்றும் பல முறை தெரிவித்திருக்கிறோம். அப்படியிருந்தும் கூட தமிழகத்தின் முக்கியமான எதிர்க்கட்சியான திமுக உள்பட எந்தக் கட்சியின் கருத்தையும் கவனத்தில் எடுக்காத அரசாக ஜெயலலிதா அரசு இருப்பது வேதனையளிக்கிறது.

விவசாய சங்கப் பிரதிநிதிகளால்கூட முதலமைச்சரை நேரில் பார்க்க முடியவில்லை. கர்நாடகத்தில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டு தமிழகத்திலிருந்து செல்லும் வாகனங்கள், தமிழக பதிவு எண் கொண்ட பேருந்துகள் ஆகியவை தாக்கப்பட்டும் தீ வைக்கப்பட்டும் பெரும் சேதம் விளைந்த நிலையில், தமிழக முதல்வர் கடிதம் எழுதியதன் மூலம் தன் கடமை முடிந்ததாக நினைக்கிறாரோ என்ற எண்ணம் பொதுமக்களிடம் உள்ளது.

கர்நாடகத்தில் அமைதி ஏற்படவும் அங்குள்ள தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவும் தமிழககம்-கர்நாடகம் இடையே அமைதியான போக்குவரத்து ஏற்படவும் முதல்வர் ஆவன செய்யவேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏறத்தாழ 50 எம்.பிக்களைக் கொண்டிருக்கும் அ.தி.மு.க தனது குரலை ஒலிக்காமல் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி வாக்களித்த மக்களிடம் இருக்கிறது.

தங்களை வெற்றி பெறவைத்த மக்களுக்காக அ.தி.மு.கவும் அதன் தலைமை பொறுப்பில் உள்ள முதல்வரும் செயல்படவேண்டும். மத்திய அரசின் தலையீட்டையும் கர்நாடக அரசின் சட்டம்-ஒழுங்கு சார்ந்த நடவடிக்கையையும் வலியுறுத்தி அமைதி ஏற்படுத்த ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+