அப்படிப்பட்ட முதல்வர் பதவிக்கு நான் வரவேண்டுமா? ஸ்டாலின் திடீர் கேள்வி
மத்திய அரசின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: யார் யாரோ முதல்வர் பதவிக்கு வந்து செல்வதால் நானும் முதல்வராக வேண்டுமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலி்ன் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் பாத்தம்பட்டியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் பொதுமக்களை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் மக்களுக்கு திமுக துணை நிற்கும். முதல்வர் பதவிக்கு நான் வர வேண்டுமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஏனேனில் முதல்வர் பதவிக்கு யார் யாரோ வந்து செல்வதால் எனக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது என்றும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை எனவும் மத்திய அரசின் பினாமி அரசாக தமிழக அரசு இயங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்திற்கு, மாநில அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாக குற்றம்சாட்டினார். மாநில அரசு உறுதிமொழி எதையும் நிறைவேற்றவில்லை எனவும் ஸ்டாலின் கூறினார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சென்று இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்தினால் திமுகவும் போராட தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்