மக்களோடு மக்களாக இருக்கும் திமுகவுக்கு திண்ணை பிரச்சாரம் புதிதல்ல..மு.க.ஸ்டாலின்
சென்னை: மக்களோடு மக்களாக எப்போதும் இருந்து வரும் திமுகவுக்கு திண்ணை பிரச்சாரம் ஒன்றும் புதிதல்ல என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு வீடாகச் சென்று இரண்டாவது நாளாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னறிவிப்பு ஏதுமின்றி ஆர்.கே.நகர் தொகுதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று அவர் அதிமுக அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வழங்கி திமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்று (சனிக்கிழமை) ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். வீடு, வீடாகச் சென்ற அவர், ‘முடங்கிய அரசு, மூழ்கிய தமிழகம்', ‘சொன்னாங்களே, செஞ்சாங்களா?', ‘ஐந்தாண்டுகளாக துருப்பிடித்து கிடக்கும் தமிழ்நாடு' என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது: தேர்தல் முடியும் வரை திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை நேற்று நான் ஆர்.கே.நகரில் தொடங்கி வைத்தேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்.

நமக்கு நாமே பயணத்தின்போது 234 தொகுதிகளிலும் மக்களை நேரில் சந்தித்து உரையாடினேன். அதுபோன்ற பிரச்சாரம் தான் இது. மக்களை நேரடியாக சந்திப்பது எனக்கும், திமுகவினருக்கும் புதிதல்ல. அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமும், மனநிலையும் ஆர்.கே.நகர், ஆயிரம் விளக்கு தொகுதி மக்களிடம் காண முடிந்தது என்றார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:
செய்தியாளர்: மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்பதை வழக்கத்துக்கு மாறான புதுவிதமான பிரச்சாரம் என்று எடுத்துக் கொள்ளலாமா ?
ஸ்டாலின்: இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. ஏற்கனவே "நமக்கு நாமே" பயணம் மேற்கொண்டு அனைத்துத் தரப்பு மக்களையும் நேரில் சென்று சந்தித்தேனோ, அதுபோன்றது தான் இது. எனவே இது ஒன்றும் புதிதல்ல.
ஜெயலலிதாவை போல வேனில் உட்கார்ந்து கொண்டு, ஹெலிகாப்டரில் போய் கொண்டும், தனி விமானத்தில் சென்றபடியும், வெள்ளத்தை பார்வையிடச் சென்றபோது கூட "வாக்காளப் பெருமக்களே" பேசுவது போன்ற செயல்கள், எங்களுடைய பணிகளில் இருக்காது. "நமக்கு நாமே" பயணத்தின் போது நான் ஏற்கனவே சொன்னபடி, திமுகவை பொறுத்தவரைக்கும் எப்போதும் அது மக்களோடு மக்களாக இருக்கக் கூடிய கட்சி.
இனி கவுன்சிலராக இருந்தாலும், மேயராக இருந்தாலும், எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், எம்.பி.யாக இருந்தாலும், யார் மக்களுடைய பிரதிநிதிகளாக இருந்தாலும், மக்களை தேடி அரசியல்வாதிகள் வர வேண்டிய கட்டாயம் இன்றைக்கு வந்திருக்கிறது. அதை ஏற்கனவே திமுக கடைபிடித்து வருகிறது.
செய்தியாளர்: ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் மனநிலை எப்படி இருந்தது ?
ஸ்டாலின்: அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமும், மனநிலையும் ஆர்.கே.நகர், ஆயிரம் விளக்கு தொகுதி மக்களிடம் காண முடிகிறது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications