மு.க.அழகிரி மீண்டும் வருவதைத் தடுக்கவே ஸ்டாலின் ராஜினாமா நாடகம்?
சென்னை: மு.க.அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர கருணாநிதி குடும்பத்தில் சிலர் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு, அது கிட்டத்தட்ட பலிக்கும் நிலை ஏற்பட்டதால்தான், அதைத் தடுக்கும் வகையில் ராஜினாமா நாடகத்தை மு.க.ஸ்டாலின் அரங்கேற்றினார் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
அழகிரியைக் கட்சியில் மீண்டும் சேர்க்க அவரது தங்கை செல்வி மற்றும் குடும்பத்தினர்தான் தீவிரமாக முயன்று வருகின்றனராம். தாயார் தயாளு அம்மாளும் அழகிரியை கட்சியில் சேர்க்க ஆதரவாக உள்ளாராம்.
இதனால் வேறு வழியின்றி கருணாநிதியும் அவர்களது நெருக்குதலுக்குப் பணியும் நிலை உருவானதால்தான் ஸ்டாலின் ராஜினாமா என்று சொல்லி கருணாநிதியைப் பணிய வைத்ததாக சொல்கிறார்கள்.

அழகிரிக்காக ஒன்று கூடிய சகோதரி - சகோதரர்
அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதே நல்லது என்று அவரது தங்கை செல்வி, தம்பி மு.க.தமிழரசு, செல்வியின் கணவர் செல்வம், இயக்குநர் அமிர்தம் ஆகியோர் கருணாநிதியிடம் தீவிரமாக வலியுறுத்தியுள்ளனர்.

தாயாரும் ஆதரவு
அதேபோல தயாளு அம்மாளும் கூட அழகிரிக்கு ஆதரவாக கருணாநிதியிடம் பரிந்து பேசினாராம்.

இறங்கி வந்த கருணாநிதி
இப்படி குடும்பத்தில் பலர் அழகிரிக்காக பரிந்து பேசியதால் திமுக தலைவர் கருணாநிதியுடம் இறங்கி வர முடிவு செய்தாராம். இந்த நேரத்தில்தான் தயாளு அம்மாளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போக அந்த முடிவு தள்ளிப் போயுள்ளது.

சுதாரித்துக் கொண்ட ஸ்டாலின்
ஆனால் அழகிரியை மீண்டும் கொண்டு வர குடும்பத்தில் பலர் திரண்டதால் கோபமடைந்த ஸ்டாலின், தனது ராஜினாமா முடிவை கருணாநிதியிடம் தெரிவித்து திட்டத்தை கொலாப்ஸ் செய்து விட்டதாக சொல்கிறார்கள்.

ஸ்டாலின் ஜால்ராக்களுக்கு கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் அழகிரி கொளுத்திய ஒரு பட்டாசு தற்போது கட்சிக்குள் சரமாரியாக வெடிக்கத் தொடங்கியுள்ளதாம். அதாவது ஸ்டாலினைச் சுற்றியுள்ள ஜால்ராக்கள் என்று கூறி அழகிரி விமர்சித்திருந்தார். தற்போது அந்த ஜால்ராக்கள் மீது கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மத்தியிலும், அடி மட்ட நிர்வாகிகள் மத்தியிலும் எதிர்ப்பும், கோபமும் கிளம்பியுள்ளதாம்.

மா.செக்களுடன் ஆலோசனை
இப்படி திடீரென தனக்கு எதிராக பலமுனைகளில் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் ஸ்டாலின். அப்போது பலரும் ஸ்டாலினுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், உங்களது உழைப்பு தான், கட்சியை இந்தளவுக்கு பாதுகாத்து வருகிறது என்று கூறியுள்ளனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், நான் மட்டும் உழைத்து என்ன பலன்? மற்றவர்களும் உழைக்க வேண்டுமே என, ஆதங்கத்தை கொட்டினாராம். இதையடுத்து உங்களுக்கு ஆதரவு தெரிவித்து நாங்கள் ராஜினாமா செய்கிறோம் என்று பல மா.செக்கள் கூறினார்களாம்.

15 பேர் ஸ்டாலினுக்கு ஆதரவாக
மேலும் 15 மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளனராம். ஆனால் எதுவுமே அறிவாலயத்தைத் தொடவில்லையாம். மேலும் இளைஞர் அணியைச் சேர்ந்த பலரும் கூட ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து விலகுவதாக கடிதம் எழுதிக் கொடுத்துள்ளனராம்.
ஆனால் தற்போது ஸ்டாலினே தனது முடிவைத் திரும்பப் பெற்றுள்ளதால், இவர்களது விலகல் முடிவும் அப்படியே நின்று விட்டதாம். ஆனால் தற்போது கட்சிக்குள் மீண்டும் வெடிக்க ஆரம்பித்துள்ள எரிமலை நிச்சயம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications