கருணாநிதி பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாவது: தமிழினத் தலைவர் கருணாநிதியின் 93 வது பிறந்த நாள் திமுகவின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஒவ்வொரு கழகத் தொண்டர்களின் உணர்வோடு பின்னிப் பினைந்த நாள். கழகத் தொண்டர்கள் அனைவரும் தங்களின் இல்ல விழாவாக கொண்டாடி மகிழும் நாள் என்பதை நானறிவேன்.

தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவரின் அரிய மக்கள் சேவையை நினைவு கூர்ந்து நாம் அனைவரும் அவரது பிறந்த நாளை இதய பூர்வமாக கொண்டாடி வருகிறோம். ஆகவே நமக்கு எல்லாம் ஒப்பற்ற தலைவராக இருக்கும் அவரின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் அணி தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆங்காங்கே மரக்கன்றுகள் நட்டும், ரத்த தானம் செய்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடும் படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன்.
தமிழினத்திற்காக, அடித்தட்டு மக்களுக்காக சீர் மிகு சேவையாற்றிக் கொண்டிருக்கும் கருணாநிநி மேலும் பல்லாண்டு வாழ்ந்து தமிழன் தலைநிமிர தன் பணியைத் தொடரும் வகையில் இளைஞர் அணியின் கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications