கற்கால ஆட்சி.. அதிமுக எம்.எல்.ஏ பேச்சை அப்படியே லாவகமாக திருப்பி விட்ட ஸ்டாலின்!
சென்னை: எந்த ஆட்சி கற்கால ஆட்சி என்பது பற்றி சட்டசபையில் நேற்று சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றது. கடந்த ஆட்சி கற்கால ஆட்சி என்று கூறி வாயை கொடுத்து வம்பை வாங்கிக்கொண்டார் ஆளும் அதிமுக எம்.எல்.ஏ ஆறுமுகம்.
எதிர்கட்சியாக இருந்தவர்கள் ஆளுங்கட்சியினராக மாறிய உடன் முந்தைய ஆட்சியை குறை கூறி தப்பித்துக்கொள்வார்கள். அதேபாணியை தற்போது அதிமுக அரசு கடைபிடிக்க முடியாது ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகாலமாகவும் அதிமுக ஆட்சியே நடைபெற்றது. இதை நினைவில் வைத்துக்கொள்ளாமல் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் திமுக ஆட்சியை விமர்சனம் செய்து மாட்டிக்கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

சட்டசபையில் கேள்வி நேரத்தில் கந்தர்வ கோட்டை அ.தி.மு.க. எம்எல்ஏ பா.ஆறுமுகம் பேசுகையில், கடந்த கால ஆட்சி, 'கற்கால ஆட்சி' என்றார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து முழக்கமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இந்த அமளிக்கு இடையே தனக்கு பேச அனுமதி தருமாறு மு.க.ஸ்டாலின் சபாநாயகரிடம் கேட்டார். சபாநாயகர் அவருக்கு அனுமதி வழங்கினார்.
அப்போது ஸ்டாலின், இங்கே ஆளுங்கட்சி உறுப்பினர் கடந்த கால ஆட்சி கற்கால ஆட்சி என்றார். கடந்த கால ஆட்சியும், அ.தி.மு.க. ஆட்சி தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இதை குறிப்பிட்டதும் தி.மு.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டினர். அ.தி.மு.க. உறுப்பினர் அடித்த பந்தை அவருக்கே திருப்பி விட்டதால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்கட்சித்தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், அவரது நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் சாதுர்யமான பதில்கள், அதிக அளவில் கேள்விகளை கேட்டு ஆளும்கட்சியினரை அசரடிக்கிறார் என்று திமுகவினர் பேசிக்கொள்கின்றனர்
இதனைத் தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது. கொளத்தூர் தொகுதியில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டப்படுமா? என்று கேட்டு ஸ்டாலின் பேசினார்.
கொளத்தூர் தொகுதியில் ராஜாதோட்டம் பகுதிகளில் உள்ள 84 குடிசை மாற்று வாரிய வீடுகள், ஜமாலியா லைனில் 128 வீடுகள், கவுரமங்கலத்தில் 448 வீடுகள், 40 ஆண்டு காலத்துக்கு மேல் ஆகியுள்ளதால் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டும் திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. எனவே, இப்பகுதியில் பழுதடைந்த வீடுகள் இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டித்தரப்படுமா? என்றார்.
இதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கையில், அந்த பகுதி வீடுகளை ஆய்வு செய்து நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதே போல் துறைமுகம் தொகுதி கிளைவ் பேட்டரி அருகில் உள்ள பழைய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டப்படுமா? என்று திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு கேட்டார்.
அதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இந்த குடியிருப்புகளின் கட்டமைப்பு உறுதி தன்மையை கண்டறிய தொழில் நுட்ப குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும். குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப சேதமடைந்த அடுக்கு மாடி குடியிருப்புகளை மீண்டும் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications