திமுக தலைவர் பதவியை ஏற்க ஸ்டாலினுக்கு ரொம்ப அவசரம்... பொறிந்து தள்ளிய அழகிரி!
ஸ்டாலின் அவசர அவசரமாக கட்சித் தலைவர் பதவியை ஏற்க செல்கிறார் என முக அழகிரி சாடியுள்ளார்.
மதுரை: ஸ்டாலின் அவசர அவசரமாக கட்சித் தலைவர் பதவியை ஏற்க செல்கிறார் என முக அழகிரி சாடியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முதன் முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 28ம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 26ம் தேதி நடைபெறுகிறது. தற்போது திமுக செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் பொருளாளர் பதவியையும் கவனித்து வருகிறார்.

28ஆம் தேதி தேர்தல்
இந்நிலையில் வருகிற 28ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும். எனவே பொதுக் குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

எந்த தவறும் இல்லை
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான அழகிரி மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தாய் கழகமான திமுகவில் நான் சேருவதில் எந்த தவறும் இல்லை.

அனைத்து தேர்தலிலும் தோல்வி
செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணிக்கு பிறகு மக்கள் என்னை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது தெரியும். கட்சியில் இருந்து என்னை நீக்கிய பிறகு திமுக எந்த தேர்தலிலும் ஒரு முறைக்கூட வெற்றி பெறவில்லை.

ஸ்டாலினுக்கு அவசரம்
கருணாநிதி இருந்தபோதே கட்சி பதவிக்கு ஆசைப்படாத நான் இப்போதா ஆசைப்பட போகிறேன்? ஸ்டாலின் அவசர அவசரமாக கட்சி தலைவர் பதவியை ஏற்க செல்கிறார் இவ்வாறு அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்,

விமர்சனம்
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அன்று முதல் திமுக குறித்தும் ஸ்டாலின் குறித்தும் அவர் விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications