தேவைப்பட்டால் ஜனாதிபதியிடம் முறையிடுவோம்.. ஸ்டாலின் ஆவேசம்
சட்டசபை சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிடுவோம்' தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை: தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முறையிட்டுள்ளோம்; தேவைப்பட்டால் குடியரசுத் தலைவரிடமும் முறையிடுவோம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை சட்டசபை கூடியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் இதற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டு திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார். இதில் எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.ரவிச்சந்திரனுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரவிச்சந்திரனை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று மாலை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறுகையில், 'சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் ஒரு கறுப்பு நாள் ஆகும். சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறோம். தேவைப்பட்டால், ஜனாதிபதியை நாங்கள் சந்தித்து முறையிடுவோம்' என்றார்.












Click it and Unblock the Notifications