அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தி.முக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தின் மூலம் பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சோளிங்கநல்லூரில் ஐ.டி. ஊழியர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியது: அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடில்லை. இந்த நான்கேமுக்கால் வருடத்தில் 4769 கற்பழிப்பு குற்றங்கள் நடைபெற்றுள்ளன. 21 ஆயிரத்து 427 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளன. டெல்லியில் நிருபயா கற்பழிப்பு சம்பவத்திற்கு பிறகு திடீரென்று முதல்வர் ஜெயலலிதா "13 அம்சத் திட்டம்" ஒன்றை அறிவித்தார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்த திட்டம். நம் முதல்வர் எப்போதுமே அறிவிப்பதில் ஹீரோ. ஆனால் செயல்படுத்துவதில்தான் ஜீரோ. அப்படித்தான் தொழில்துறை சம்பந்தப்பட்ட 110 அறிவிப்புகளாக இருந்தாலும் இருக்கிறது.
ஐ.டி. பற்றிய 110 அறிவிப்பாக இருந்தாலும் இருக்கிறது. அந்த வகையில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் பாதுகாப்பு பற்றி அறிவிக்கப்பட்ட அந்த 13 அம்சத் திட்டம் அப்படியே கிடக்கிறது. 13 அம்ச திட்டம் அறிவித்த பிறகுதான் பெண்களுக்கு எதிராக 21 ஆயிரம் குற்றங்கள் நடந்துள்ளன. 4769 கற்பழிப்புகள் நடந்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களின் பாதுகாப்பு முதலில் உறுதி செய்யப்படும்.
அதே போல் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்பவும், பாதுகாப்பான சூழலில் பணிக்கு வரவும் சீரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications