சொத்து குவித்த குற்றவாளியை தலைவராகக் கொண்ட கட்சியின் பதவியேற்பு.. போகவில்லை ஸ்டாலின்!
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை.
ஸ்டாலின் மட்டுமல்லாமல் பிற எதிர்க்கட்சியினர் யாரும் கூட இதில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஸ்டாலினுக்கு பதவியேற்பு விழாவுக்கு வருவதற்கு அழைப்பு அனுப்பப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் அவர் விழாவைப் புறக்கணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. காரணம், அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சசிகலா. அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு கால சிறைத் தண்டனையும், ரூ. 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டவர். இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இப்படிப்பட்டவரை தலைவராகக் கொண்ட ஒரு கட்சியின் பதவியேற்பு விழாவுக்குப் போவதில் விருப்பம் இல்லாமல்தான் ஸ்டாலின் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவசரமாக பதவியேற்பு விழாவை வைத்து விட்டு வாங்க என்றால் எப்படி வர முடியும் என்று கேட்டுள்ளார்.