தி.மு.க. ஆட்சியின் 2வது கையெழுத்து "லோக் ஆயுக்தா" சட்டம் கொண்டு வருவதுதான்... மு.க.ஸ்டாலின் உறுதி
திருவாரூர்: தி.மு.க. ஆட்சி அமைத்தால் ஊழலை ஒழிக்க "லோக் ஆயுக்தா" சட்டத்தை கொண்டு வருவோம் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
திருவாரூரில் "நமக்கு நாமே" விடியல் மீட்பு பயணத்தின் ஒருபகுதியாக பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி 85% முடிவடைந்துவிட்டது. தற்போது நீங்கள் தெரிவித்த கருத்துகள், மனுவில் கூறப்பட்டுள்ள கருத்துகள் ஆகியவற்றை படித்து எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அவற்றை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்வோம்.
2006 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தி.மு.க. அரசு நிறைவேற்றிய சாதனைகளை இனிமேல் யாரும் செய்ய முடியாது. அப்படி இருந்தும் தேர்தலில் தோல்வியை சந்தித்தோம். அப்படி என்றால் எங்கேயோ சிறிய தவறு நடந்து இருக்கலாம் என்று தானே அர்த்தம்.
சில தவறுகள் நடந்து இருக்கலாம். தெரிந்தோ, தெரியாமலோ பெரிய பொறுப்பில் இருந்தவர்கள் கூட தவறு செய்து இருக்கலாம்.
ஆனால் இனிமேல் அப்படி தவறு நடக்கக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். ஊழலை ஒழிக்க, ஊழல் செய்தவர்களை தண்டிக்க லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்த முதல் கையெழுத்து போடப்படும். அடுத்த கையெழுத்து லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவதற்காக போடப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications