100 பேரை வைத்து சசி குறித்து அவதூறு பரப்புகிறார் ஸ்டாலின் மருமகன்.. தங்க தமிழ்ச்செல்வன் புகார்
ஸ்டாலின் மருமகன் தான் சசிகலா குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகிறார் சசிகலா தரப்பு அதிமுக எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஸ்டாலின் மருமகன்தான் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருவதாக சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இதற்காக 100 பேர் கொண்ட குழு இயக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் சசிகலா ஆதரவு மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தமிழக மக்கள் அனைவரும் சசிகலாவை வரவேற்பதாக கூறினார்.
பல இடங்களில் சசிகிலா குடும்பத்தினர் கையில் கட்சியும் ஆட்சியும் இருப்பது சரிதான் என சப்பைக் கட்டுக் கட்டினார். தமிழக மக்கள் அனைவரும் சசிகலாவை வரவேற்பதாகவும் கூறினார்.
அப்போது சமூக வலைதளங்களில் சசிகலாவுக்கு எதிராக செய்திகள் வருகின்றனவே என்றார் தொகுப்பாளர். அதற்கு பதிலளித்த எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினின் மருமகன்தான் சசிகலா குறித்த தவறான செய்திகளை பரப்பி வருகிறார் என்றார்.
இதற்காக 100 பேர் கொண்ட குழுவையும் அவர் இயக்கி வருவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். இதுகுறித்து சட்டசபையில் பேசப்போவதாகவும் அவர் கூறினார்.
மேலும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு அதிமுகவுக்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாது என்றும் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.