''ஒரு பொம்மலாட்டம் நடக்குது.. ரொம்ப புதுமையாக இருக்குது''... மு.க.ஸ்டாலின்!
கடலூர்: இன்னும் ஓ.பன்னீர்செல்வம் அறையில் நிதி அமைச்சர் என்ற பெயர்ப்பலகை தான் இருக்கிறது. அதை கழற்ற வேண்டிய பொறுப்பு சட்டமன்ற செயலாளருக்கு உள்ளது. ஆனால் அதை அவர் செய்யவில்லை. இப்படி தமிழகத்தில் ஒரு பொம்மை ஆட்சி நடக்கிறது. பொம்மை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார் என்று கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
கடலூரில் நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அரசியல் மாற்றம்
கடந்த 27-ந் தேதி முதல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
மக்களுக்கு மகிழ்ச்சி தரும் மாற்றம்
இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சிகரமான மாற்றமாக அமைந்து இருக்கிறது. இந்த மாற்றம் நிகழ்ந்த நேரத்தில் நாங்கள் பொறுமை காத்தோம்.
நாங்கள் பொறுமை காத்தது ஏன்
ஏனெனில் இந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நீதிக்கு தலைவணங்க வேண்டும் என்று ஏற்கனவே எங்களுக்கு தி.மு.க. தலைவர் கட்டளை இட்டு இருந்தார். அதனால் நாங்கள் பொறுமை காத்தோம். ஆனால் சில பத்திரிகைகள் கலைஞர் அமைதியாக இருக்கிறார் என்று எழுதியது.
செயலாளரின் பணி என்ன
கடந்த 27-ந் தேதி முதல் சட்டமன்ற செயலாளரின் போக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கிறோம். அவரது பணி என்ன தெரியுமா? ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவி போய் விட்டால், அந்த தொகுதி காலியாக இருக்கிறது என்று அறிவிக்க வேண்டும்.
இதுவரை அறிவிக்காத சட்டசபை செயலாளர்
ஆனால் கடந்த 27-ந் தேதி முதல் தற்போது வரை அந்த தொகுதி காலியாக இருக்கிறது என்பதை அவர் அறிவிக்கவில்லை. தீர்ப்பு வந்ததற்கு மறுநாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக தேர்வு செய்கிறார்கள். அதற்கு அடுத்தநாள் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது.
இன்னும் நிதியமைச்சர் பெயர்ப் பலகை
ஆனால் இன்னும் ஓ.பன்னீர்செல்வம் அறையில் நிதி அமைச்சர் என்ற பெயர்ப்பலகை தான் இருக்கிறது. அதை கழற்ற வேண்டிய பொறுப்பு சட்டமன்ற செயலாளருக்கு உள்ளது. ஆனால் அதை அவர் செய்யவில்லை.
தகவல் வரவில்லை என்கிறார் பிரவீன் குமார்
நேற்று முன்தினம் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் , ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் என்று அறிவித்து இருக்கிறார். அப்போது, ஒரு நிருபர் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக சட்டமன்ற செயலாளரிடம் இருந்து உங்களுக்கு கடிதம் வந்ததா? என்று கேட்டதற்கு, அவர் இன்னும் தகவல் வரவில்லை என்று சொல்கிறார்.
இப்படி ஒரு பொம்மை ஆட்சி
இப்படி தமிழகத்தில் ஒரு பொம்மை ஆட்சி நடக்கிறது. பொம்மை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். 2016-ம் ஆண்டு தமிழகத்தில் கலைஞர் தலைமையில் ஆட்சி அமையும் என்று சபதம் ஏற்போம் என்றார் ஸ்டாலின்.