பஸ் கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்தாமல் இருக்க 27 பரிந்துரைகள்... ஸ்டாலின் விளக்கம்!
போக்குவரத்து கழக நிர்வாக சீர்கேட்டை சரிசெய்வதற்கான 27 பரிந்துரைகளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வரிடம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை : போக்குவரத்து கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்தாமல் மாநில அரசே நிர்வாகத்தை சீர் செய்வதற்கான 27 பரிந்துரைகளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று முதல்வர் பழனிசாமியிடம் அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து திமுக ஆய்வறிக்கையை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது : பேருந்து கட்டண உயர்வை எப்படி சீர்படுத்துவது சமாளிப்பது, குறிப்பாக நிர்வாக சீரமைப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர்களாக இருந்த கே.என்.நேரு, பொன்முடி , தொழிற்சங்க பேரவைப் பொருளாளர் சண்முகம்,செங்குட்டுவன் உள்ளிட்டோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு 2 வாரமாக ஆய்வு செய்து 2 நாட்களுக்கு முன்னர் ஆய்வு அறிக்கையை என்னிடம் அளித்தார்கள். அந்த ஆய்வு அறிக்கையை இன்று தமிழக முதல்வர் பழனிசாமியிடம் அளித்துள்ளோம். ஆய்வறிக்கையை பொருத்தவரையில் 27 பரிந்துரைகள் அறிக்கையில்அடங்கியுள்ளது.
இந்த அறிக்கையின் படி செயல்பட்டால் மக்கள் தலையில் பேருந்து கட்டண உயர்வை சுமத்தத் தேவையில்லை என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறோம். குறிப்பாக போக்குவரத்து கழகங்களை பொதுமக்களின் சேவையாக கருதி அதன் மூலம் ஏற்படும் நஷ்டம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.
பெட்ரோல்,டீசலுக்கு ஒரே வரி
தமிழ்நாடு போக்குவரத்து கழக மத்திய போக்குவரத்து நிதியம் மற்றும் தமிழ்நாடு அரசு பேருந்து ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்கி போக்குவரத்து கழகங்களை சீரமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான கலால் மற்றும் மதிப்பு கூட்டல் வரியை ரத்து செய்துவிட்டு ஒரே வரியாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரியை விதித்திட வேண்டும்.
நல்லிணக்கக் கூட்டம்
பயணிகள், ஓட்டுநர்கள், கண்டக்டர்களிடையே மாதந்தோறும் நல்லிணக்கக் கூட்டம். பேருந்துகளை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 27 பரிந்துரைகளை அளித்துள்ளோம். இதனை நிறைவேற்ற முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளோம்.
துணை முதல்வரிடமும் அறிக்கை அளிப்பு
முதல்வரை சந்தித்த போது துணை முதல்வர், போக்குவரத்துத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் இருந்தனர். அவர்களிடமும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றுவோம் என்று எந்த உறுதியும் அளிக்கவில்லை, பார்க்கலாம் என்று மட்டுமே சொல்லி இருக்கிறார்.
எதிர்க்கட்சி என்ற முறையில்
அரசு நிர்வாகம் செயல்படாத நிலையில் இருப்பதால் தான் நிர்வாகத்தை எப்படி சீர்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான நாங்கள் சொல்லி இருக்கிறோம். இதனை அலட்சியப்படுத்தினால் தொடர்ந்து கண்டனக் கூட்டங்கள் நடைபெறும், தேவைப்படும் பட்சத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மீண்டும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.