மதுரையில்.... ஜில் ஜில் ஜிகர்தண்டாவை ருசித்த மு.க.ஸ்டாலின்
மதுரை: மதுரையில் நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு கடையில் மதுரையின் அடையாளமான ஜில் ஜில் ஜிகர்தண்டாவை ரசித்துச் சாப்பிட்டார். கடைக்காரர் காசு வாங்க மறுத்தபோதும் வற்புறுத்திக் கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் மதுரையில் ரவுண்ட் அடித்தார்.
இன்று மாலை மதுரை மாநகரத்தில் முக்கிய பிரமுகர்களையெல்லாம் சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தொழிலாளர்கள், வணிகர்கள், தொழில் முதலீட்டாளர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

தொழில் நகரமாக மதுரை இல்லையே
அப்போது ஸ்டாலினிடம் பேசிய அவர்கள், மதுரை மாநகரம், வணிகம் செய்வதற்கோ தொழில் தொடங்குவதற்கோ, ஏழை, எளிய மக்கள் வாழ்வதற்கோ ஏற்ற வகையில் இல்லை. உடனடியாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

யாருமே வாழக் கூடாது என்று செயல்படும் அதிமுக அரசு
அதற்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின், கடந்த திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களும், எண்ணற்ற தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கெல்லாம் தமிழகம் முழுவதும் இன்று இருக்க்க்கூடிய தொழிற்சாலைகளே சாட்சி. ஆனால் அதிமுக ஆட்சியில், ஒரு தொழிற்சாலையாவது தொடங்கப்பட்டுள்ளனவா என்பதை காட்ட முடியுமா? யாருமே வாழக்கூடாது என்பதற்காக ஒரு ஆட்சி நடக்கிறது என்றால், அது அதிமுக ஆட்சிதான்.

மாற்றத்தை ஏற்படுத்துங்கள்
உடனடியாக இந்த அவலங்களையெல்லாம் மாற்ற வேண்டுமெனில், நீங்களெல்லாம் ஒன்றினைந்து அந்த மாற்றத்தை ஏற்படுத்தி தர வேண்டுமென்றும், அதற்கான முயற்சியை இன்றிலிருந்து தொடங்குங்கள் என்றார் ஸ்டாலின்.

நேதாஜி சிலைக்கு மாலை
முன்னதாக நேதாஜி சாலையில் உள்ள நேதாஜி சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு திரண்டிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நடந்து சென்ற அவர், நகை வியாபாரிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

நகை வியாபாரிகளிடம் குறை கேட்டார்
அப்போது அதிமுக ஆட்சியில் வியாபாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து குறைகளையும் கேட்டறிந்தனர். அதை கேட்டபின் அவர்களிடத்தில் பேசிய ஸ்டாலின், அதிமுக அரசு வணிகவரித்துறையை வைத்துக்கொண்டு, நகை வியாபாரிகளை மிரட்டி உருட்டி வருவதாகவும், நகை திருடர்களை வைத்துக்கொண்டு நகைக்கடைகளை அச்சுறுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எதற்காக சுற்றுப்பயணம்.. விளக்கிய ஸ்டாலின்
தங்கத்தின் இறக்குமதி வரியை 10 சதவீத்த்திலிருநது குறைக்க வேண்டுமென்று திமுக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் அதிமுக அரசு எந்தவிதமான கவலையும் கொள்ளாமல் இருந்து வருவதாக குற்றம்சாட்டினார். எனவே வணிகர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களையும் நிறைவேற்றும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும். அதற்காகத்தான் தேர்தல் அறிக்கை குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

கூலா ஜிகர்தண்டா
பின்னர் மதுரை கடைவீதியில் ஜிகர்தண்டா அருந்திய ஸ்டாலின், கடை உரிமையாளர் ஜிகர்தண்டாவிற்கு பணம் வாங்க மறுத்த போதும், கட்டாயமாக ஜிகர்தண்டாவிற்கான பணத்தை வழங்கினார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications