தூத்துக்குடி என். பெரியசாமி இறுதி ஊர்வலம்... ஸ்டாலின், துரைமுருகன் பங்கேற்பு!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.
தூத்துக்குடி: மறைந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.என். பெரியசாமியின் இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின், துரைமுருகன் பங்கேற்றனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி கடந்த வெள்ளிக்கிழமை சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து என்.பெரியசாமியின் உடல் சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
என். பெரிய சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் விமானம் மூலம் நேற்று தூத்துக்குடிக்கு சென்றனர்.பின்னர் பெரியசாமியின் வீட்டிற்கு சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
என்.பெரியசாமியின் மகளும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான கீதா ஜீவன் மற்றும் என்.பெரியசாமியின் மகன் ஜெகன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி, வேலு, உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
பெரியசாமியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து பெரியசாமியின் உடல் போல்பேட்டையில் அவரது வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications