இன்ஸ்டாகிராம் மூலம் ஆட்சிக்கு வந்துள்ளனர்.. தோல்வியால் திமுகவினர் சோகமாக இருக்க கூடாது.. ஸ்டாலின்!
தஞ்சாவூர்: இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிறு குழந்தைகளை பரப்புரை செய்ய வைத்து அவர்களை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளதாக விமர்சித்துள்ள ஸ்டாலின், திமுக கொண்டு வந்த திட்டங்களை யாராலும் தடுத்துவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக 59 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை பறி கொடுத்தது. அதிலும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்தது திமுகவினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதன்பின் திமுக தலைவர் ஸ்டாலின் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். திமுக தோல்விக்கான காரணங்களை விரிவாக விசாரிக்க குழுக்களை அமைத்துள்ளார்.

அதேபோல் கட்சி நிர்வாகிகளையும் தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். இந்த நிலையில் தஞ்சாவூரில் பூண்டி கலைவாணன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது ஸ்டாலின் பேசுகையில், தேர்தல் தோல்விகளை கண்டு திமுக சிதறாது. திமுகவினர் யாரும் சோகமாக இருக்க தேவையில்லை.
வெற்றி, தோல்வி என்பதை சமமாக கருதி பாடுபட்டு கொண்டிருக்கக் கூடிய தொண்டன் தான் திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது. திமுக கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போதைய அரசு செயல்படுத்தி வருகிறது. திமுகவின் சாதனைகளை யாராலும் மாற்ற முடியாது. திமுகவின் திட்டங்கள் இருக்கும் வரை நாம்தான் ஆட்சி செய்கிறோம் என்று அர்த்தம்.
இந்த திட்டங்களை யாராலும் மாற்றிவிடவோ, தடுத்துவிடவோ முடியாது. தேர்தல் தோல்வி குறித்து அனைவரிடமும் கருத்துக் கேட்டு வருகிறோம். நாம் அனைத்து பணிகளையும் செய்து தோல்வி அடைந்தோம். அவர்கள் எந்த பணியையும் செய்யாமல் வெற்றி பெற்றனர். சோசியல் மீடியா.. குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் இரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது.
சிறு குழந்தைகளை பரப்புரை செய்ய வைத்து அவர்களை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். பெற்றோர், குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். திமுகவின் கதை முடிந்துவிட்டது என்று நமது இன எதிரிகள் நினைக்கிறார்கள்.. ஆனால் திமுக தோல்வி அடைந்த போதெல்லாம் ஒரு ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்துள்ளது. அதுதான் நமது வரலாறு.. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்.
அதேபோல் தவெக ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப்போவதில்லை. தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த தொந்தரவாக இருக்க மாட்டோம். ஆனால், இயலாமையை மறைக்க திமுக மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம்
சமூக ஊடகங்களில் பொய்களை பரப்பினால் உண்மையை போட்டுடைப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications