ஆளுநரிடம் ஸ்டாலின் அளித்த மனு.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி
பரபரப்பான அரசியல் சூழலில் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜ்பவனில் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்த ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் தனபால் இதை நிராகரித்துவிட்டார். இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ளேயே போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபை மார்ஷல் சீருடையில் வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இதுகுறித்து அப்போதே ஸ்டாலின் ஆளுநரிடம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு கோடி கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவில் அம்பலமாகியுள்ளது.
அதில் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் பேரம் பேசியது குறித்து இடம்பெற்றிருந்தது. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சட்டசபையில் விவாதிக்க முக ஸ்டாலின் அனுமதி கோரினார். அதற்கு ஆதாரம் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் சட்டசபையில் விவாதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.
இதனால் நேற்று சட்டசபையில் வீடியோ ஆதாரத்துடன் வருகை தந்த ஸ்டாலின், கூவத்தூர் பேரம் குறித்து விவாதிக்க கோரியும் சபாநாயகர் மறுத்துவிட்டார். இந்நிலையில் இன்று சென்னை வந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, ராஜ்பவனில் எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்
சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் வலியுறுத்தினோம். சட்டரீதியாக கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
ஸ்டாலினின் கோரிக்கை ஏற்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டால், எடப்பாடி அரசு மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டி வரும். தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக மூன்று அணிகளாக சிதறிக்கிடக்கிறது. இதனால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.