ஜெயலலிதா வெள்ளத்தை பார்க்க வந்தாரா?: தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தாரா? கேட்கிறார் ஸ்டாலின்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை வேனில் இருந்தபடியே பார்வையிடும் முதலமைச்சர் ஜெயலலிதாவால், மக்களின் குறைகளை எப்படி அறிந்து கொள்ள இயலும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வெள்ளத்தை பார்வையிட வந்தவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தது போல பேசியது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடகிழக்கு பருவ மழைக்கு சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழைநீருடன் கழிவு நீர் கலந்துள்ளது. எனவே, சென்னை முழுவதுமே தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். உணவு, அரிசி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கினார்.

மருத்துவ முகாம்கள்
மழை வெள்ளத் தால் பரவும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் 7 இடங்களில் மழை வெள்ள நிவாரண மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.இந்த முகாம்களில் ஏராளமான பொது மக்கள் ரத்த பரிசோதனை செய்து கொண்டனர்.

ஸ்டாலின் ஆய்வு
அயன்புரம் வசந்தம் கார்டன், ரமணா நகர், ஜமாலியா, அகரம், என்.வி.என். நகர், நீலமேகம் தெரு, ஜி.கே.எம். காலனி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்களை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அங்கு வந்த பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். பிறகு பெரவள்ளூர் சாலையில் மழை வெள்ளம் தேங்கி நின்றதை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
வில்லிவாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நல திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். பெரம்பூர், சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை பகுதிகளுக்கு சென்ற ஸ்டாலின் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

நிவாரண உதவிகள்
சைதாப்பேட்டை, ஆலந்தூர் பகுதிகளில் செட்டி தோட்டம், ஐந்து லைட் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் பேருக்கு தலா 25 கிலோ அரிசி, போர்வைகள் வழங்கினார். பிறகு அடையாற்றில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட்டார்.

முதல்வர் வந்தது ஏன்?
நிவாரண உதவிகள் வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து அறிக்கைகள் மூலம் வலியுறுத்தியதன் எதிரொலியாகவே, முதல்வர் ஜெயலலிதா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிடச் சென்றதாக தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரம்
வேனில் இருந்து இறங்காமல், வெள்ளநீர் காலில் படாமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தது போல முதல்வர் வந்து போனது ஏன்? இதன் மூலம் மக்களின் துயரத்தை எப்படி அறிந்து கொள்ள முடியும் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

பணம் எங்கே போச்சு?
மழை வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ. 600 கோடி ஒதுக்கியதாக ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தார். ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களும் பல்வேறு திட்டங்களை அறிவித்தனர். சென்னைக்கு மட்டும் ரூ. 2500 கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த பணம் எங்கே போனது?.

வெள்ளை அறிக்கை தேவை
அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நான் கடலூரில் வெள்ள பகுதிகளை பார்வையிட்ட போது கேட்டிருந்தேன். அது பற்றி இது வரை பதில் இல்லை. அந்த பணத்தை செலவிட்டு இருந்தால் இந்த அளவுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டி ருக்காது. எனவே தான் வெள்ளை அறிக்கை கேட்டேன். ஆனால் ஜெயலலிதா மவுனம் சாதிக்கிறார் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications