பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர எதிர்ப்பு... வாட்டும் விலைஉயர்வுக்கு விடிவு இல்லையா?
பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அது குறித்து முடிவு எடுக்கப்படாமலே கூட்டம் முடிந்துள்ளது.
சென்னை: பெட்ரோலியப் பொருட்களின்விலை நாளுக்கு நாள் ஏற்றம் கண்டு வரும் நிலையில் அதனை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு மாநிலத்தவர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் இது குறித்து முடிவு எட்டப்படவில்லை.
கடந்த ஜூலை மாதம் முதல் தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்த வண்ணமே உள்ளன. மாநில அரசு வாட் வரியை குறைத்தால் மட்டுமே பெட்ரோல், டீசல்விலை குறையும் என்று மத்திய அரசு கைவிரித்து விட்டது.

இந்நிலையில் வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதன் அடிப்படையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற 25வது ஜிஎஸ்டி கவுன்சில்கூட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்ப்பால் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வருவதற்கு ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் எந்த முடிவும் எட்டப்படாமல் பெட்ரோலியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்த விவகாரம் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடுத்தர வர்க்க மக்களை கடுமையாக வாட்டி வருகிறது. இதனால் ஜிஎஸ்டியின் கீழ் ஒரு குறிப்பிட்ட அளவு வரி நிர்ணயிக்கப்பட்டால் விலை உயர்வில் இருந்து தப்பிக்கலாம் என்பதாலேயே மக்கள் இந்த கோரிக்கையை விடுத்தன. ஆனால் வாட் வரி விதித்து பெட்ரோலியப் பொருட்கள் மூலம் வருவாய் ஈட்டும் மாநில அரசுகளின் எதிர்ப்பாலேயே இந்த முடிவு நிறைவேற்றப்படவில்லை, இதனால் மக்களின் கவலை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications