தூத்துக்குடியில் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை.. ஒரே நாளில் நிறைவடைந்தது
தூத்துக்குடியில் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நடத்திய ஆய்வு நிறைவடைந்தது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர். தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று இரவு தூத்துக்குடிக்கு வரவுள்ளனர்.

அதற்கு முன்னதாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தைச் சேர்ந்த குழுவினர் இன்று தூத்துக்குடிக்கு வந்தனர். மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஜெயசந்திரன் மற்றும் சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்திய பிறகு கலவரம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிட்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் உடைக்கப்பட்ட பொருட்கள், அருகில் இருந்த ஏடிஎம் மற்றும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்ட இடத்தையும் ஆட்சியர் சந்தீப் நந்தூரியுடன் பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பில் எரிக்கப்பட்ட பகுதிகள், வாகனங்களையும் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 52 பேரையும், உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் இன்று முழுவதும் விசாரணை நடத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கலவரத்திற்கு காரணம் என்ன, மனித உரிமை மீறல் நடந்ததா, சேதமடைந்த பொருட்களின் மதிப்பு எவ்வளவு ஆகியவற்றை குறித்து விசாரணை நடத்தப்பட்டு பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதை தொடர்ந்து அதிகாரிகள் சென்னை திரும்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications