“திடுக்கிட” வைக்கும் தகவல்கள்.. கலாஷேத்ரா மாணவிகளுக்கு நடந்தது என்ன? இன்று மனித உரிமை ஆணையம் விசாரணை
சென்னை: கலாஷேத்ரா நடன, இசை கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்து இருக்கிறது மாநில மனித உரிமை ஆணையம். அதன்படி இன்று கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் இது தொடர்பாக விசாரணை செய்கிறது.
சென்னை திருவான்மியூரில் அமைந்து இருக்கிறது கலாஷேத்ரா அறக்கட்டளை. 80 ஆண்டுகள் பழமையான இந்த கட்சி மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட நடனம், இசை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் சிலர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் மாணவ மாணவிகள் கடந்த மார்ச் 30 ஆம் தேதி கல்லூரி வளாகத்திற்கு உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அரசியல் தலைவர்கள், பெண்ணியவாதிகள், சமூக ஆர்வலர்கள், வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையத்துக்கு தெரியவரவே இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதியது.
ஆனால், அந்த கடிதம் உடனே திரும்பப்பெறப்பட்டது. இதற்கு மத்தியில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி தலைமையில் கல்லூரி மாணவிகளிடம் விசாரணை தொடங்கியது. அதேபோல் கல்லூரி நிர்வாகம் தரப்பிலும் முன்னாள் டிஜிபி, முன்னாள் நீதிபதி, மருத்துவர் என மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மகளிர் ஆணையம் விசாரணை செய்து வரும் நிலையில், அதை நீர்த்துப்போக செய்யும் வகையில் கல்லூரி நிர்வாகம் தனி விசாரணை கமிட்டு அமைத்து உள்ளதாக மாணவிகள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது அங்கு பயின்ற முன்னாள் மாணவி ஒருவர் சென்னை அடையாறு காவல் நிலையத்தில் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதனை தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கவே, ஆசிரியர் ஹரி பத்மன் தலைமறைவானார். அவர் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து போலீசார் அவரை கைது செய்தனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர், ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்நாடு அரசு தரப்பு வாதத்தை கேட்டு இன்று ஒத்திவைத்தார். இதற்கிடையே மாநில மனித உரிமை ஆணையம் நாளிதழில் வெளியான செய்தியை பார்த்து தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்து இருக்கிறது. இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணைய துணை பதிவாளர் வெளியிட்டு இருக்கும் உத்தரவில், மாநில மனித உரிமை ஆணைய ஐஜி/இயக்குநர் இன்று கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் இது தொடர்பாக விசாரணை செய்து 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications