தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.3,000 ரொக்கம் - வங்கிகணக்கில் மீதி சம்பளம்
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை ரூ.3,000 ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ளது. ஏடிஎம் முன்பாக மணிக்கணக்கில் மக்கள் காத்திருக்கின்றனர். வங்கிகளில் கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது.
அரசு ஊழியர்கள் தங்களின் மாத சம்பளத்தை ரொக்கமாக கையில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகின்றனர். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாதம்தோறும் 30ம் தேதி அவர்களின் வங்கி கணக்கில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்தப்படும்.
இந்த மாதமும் அவர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியமும் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் தொகுப்பூதியதாரர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்க விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தி உள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது.
ஏடிஎம்கள் சீரமைக்கப்பட்டு வருவதால் பணம் எடுப்பதில் உள்ள சிக்கல்கள் இன்னும் சில நாட்களில் தீர்ந்து விடும் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இதனிடையே போக்குவரத்து ஊழியர்கள் இந்த மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில், 1.60 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அரசு போக்குவரத்து வருவாய் பாதியாக சரிந்துள்ளது.
இந்நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை மட்டுமே, வங்கிகளில் எடுக்க முடியும் என, அரசு அறிவித்துள்ளது. இதனால், அனைத்து தரப்பு ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து ஊழியர்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் நின்றால், போக்குவரத்து சேவை பாதிக்கும்.
இதை தவிர்க்க, தொழிலாளர்கள் பணிபுரியும் கிளைகளில், நேரடியாக சம்பளம் வழங்க அரசும், கழக நிர்வாகமும் ஏற்று அந்தந்த கிளைகளில், ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று 3000 ரூபாய் முன்பணமாக கையில் ரொக்கமாக வழங்கப்படும் என்றும் மீதம் உள்ள ஊதியத் தொகை வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.