ஆட்சி - கட்சி விஷயங்களில் யாரும் தலையிடக் கூடாது.. உறவினர்களுக்கு சசிகலா கடும் எச்சரிக்கை !
ஆட்சி, கட்சி விவகாரங்களில் யாரும் தலையிடக் கூடாது என தனது உறவினர்களுக்கு சசிகலா எச்சரிக்கையாக கூறியுள்ளார்.
சென்னை: ஆட்சி, கட்சி விவகாரங்களில் உறவினர்கள் யாரும் தலையிடக் கூடாது என சசிகலா தனது உறவினர்களிடம் கடுமையா கூறியுள்ளார். மேலும் எனது உறவினர்கள் யார், எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதை ஏற்று எதுவும் செய்ய வேண்டியதில்ல என்று அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளிடமும் சசிகலா கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த போது, அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஜெயலலிதா மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்.

அதிமுகவை இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக உருவாக்கியதில் அவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால் தற்போது ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யார் பூர்த்தி செய்வது என்ற மில்லியன் கேள்வி எழுந்துள்ளது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் யாரும் அதிமுகவில் இல்லை என்றே சொல்லலாம். இருப்பினும் ஆட்சியை தக்க வைக்க ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
அதுபோல ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்து எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்களும் சசிகலாவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சசிகலா பொதுச் செயலாளர் ஆகிவிட்டால் அவரது உறவினர்களின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கும் என்ற பேச்சும் பரவலாக காணப்படுகிறது.
முன்பு ஒரு முறை அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் கடந்த 2011 சட்டசபை தேர்தலுக்கு பின்னர், துரோகிகள் என அறிவிக்கப்பட்டு சுமார் 14 பேரை அதிமுகவில் இருந்து வெளியேற்றி ஜெயலலிதா உத்தரவிட்டார். பின்னர் 4 மாதங்களுக்கு பின்னர் சசிகலாவை மற்றும் போயஸ் கார்டனுக்குள் அனுமதித்தார் ஜெயலலிதா. தற்போது அந்த பேச்சும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கையை சசிகலா மேற்கொண்டார். கடந்த புதன்கிழமை அவர் தனது உறவினர்கள் அனைவரையும் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வரவழைத்தார். அப்போது அவர்களிடம் சசிகலா, ''நீங்கள் யாரும் அ.தி.மு.க. கட்சி விவகாரங்களில் ஈடுபட கூடாது. அதுபோல ஆட்சி நிர்வாகத்திலும் எந்த உத்தரவும் போடக்கூடாது. எந்த விதத்திலும் ஆட்சியிலும், கட்சியிலும் உங்கள் குறுக்கீடு இருக்கக் கூடாது'' என்று அதிரடியாக உத்தரவிட்டார். இந்த உத்தரவை அவரது உறவினர்களும் ஏற்றுக்கொண்டனர்.
மறுநாள் (வியாழக்கிழமை) முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை சசிகலா சந்தித்தார். டிஜிபி ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளையும், சசிகலா சந்தித்தார்.
அப்போது அவர்களிடம், ''எனது உறவினர்கள் யார், எந்த உத்தரவு பிறப்பித்தாலும் நீங்கள் ஏற்க கூடாது. அவர்களது கோரிக்கைகளை நீங்கள் ஏற்று எதுவும் செய்ய வேண்டியதில்லை'' என்று சசிகலா கேட்டுக் கொண்டார். சசிகலாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சசிகலாவுடன் தற்போது சில உறவினர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் இளவரசி தவிர சசிகலா உறவினர்கள் அனைவரும் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேறி விடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்தான் பார்ப்போம்..












Click it and Unblock the Notifications