அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தலில் பணப்பட்டுவாடா.. ராமதாஸ் குற்றச்சாட்டு
தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்று ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி: வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்து கொண்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக இன்று திருச்சி சென்ற ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நடைபெற உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல்களில், மாநில கட்சிகளுக்கு ஆண்ட, ஆளுகிற கட்சிகளுக்கு ஓட்டுப் போட ஏதாவது ஒரு காரணம் மக்களிடம் இருக்க முடியுமா? இந்த மூன்று தொகுதிகளிலும் பணபட்டுவாடா நடந்து கொண்டிருக்கிறது.
அதிமுக 2011 லிருந்து இது வரை என்ன சாதனையை நிகழ்த்திவிட்டது. மின் துறையில் தொடர்ந்து ஊழல் நடைபெற்று வருகிறது. இதனை பாமக தொடர்ந்து கண்டித்தும் வருகிறது. தமிழ்நாட்டில் 88 லட்சம் பேர் வேலையில்லாமல் திண்டாட்டத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் 69 ஆயிரம் 444 ரூபாய் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.
அதிமுக செய்த ஊழல்கள் குறித்த புள்ளி விவரத்தோடு தயாரித்த பட்டியலை ஆளுநரை சந்தித்து கொடுத்தோம். அந்த புகார் என்ன ஆனது. குப்பைத் தொட்டிக்குத்தான் போனது. கவர்னர் எப்படி பட்டவர் என்பதை நாடாறியும். 110 விதியின் கீழ் 600 திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதுகுறித்தெல்லாம் பேச்சு ஒன்றும் இல்லை.
தமிழக அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதா என்று சென்னை உயர் நீதி மன்றமே கேட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வேண்டும். 45,000 கோடி நிதிப் பற்றாக்குறை நடப்பாண்டில் ஏற்பட்டுள்ளது. நீதித் துறையே நிதிப் பற்றாக்குறையில் இருக்கிறது. இது நல்ல நிர்வாகத்துக்கான அடையாளம் அல்ல என்று ராமதாஸ் கூறினார்.